சென்னை பழனி மார்ஸ் இயக்குனர் பிஜு இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவாகக்கூடிய திரைப்படம். இப்படத்திற்கு கதை ஆசிரியராக நடிகர் விஜய் சேதுபதி பணியாற்றியுள்ளார்.
கதை
நாயகன் பிரவீன் ராஜாவின் குரலில் தான் படம் துவங்குகிறது. விஞ்ஞானியான பிரவீனின் தந்தைக்கு செவ்வாய்கிரகத்திற்கு போக வேண்டும் என்பது வாழ்க்கை லட்சியம். அதற்காக அவர் இஸ்ரோவில் வேலைக்கு சேராமல், ராவணன் போல் சிந்தனை ஆற்றலின் மூலமாக வேறு கிரகத்திற்கு பயணிக்க முடிவு செய்கிறார்.
பிறரது பரிகாசங்களை காதில் போட்டுக்கொள்ளாமல் அப்பாவும், மகனும் ஒரு மலை உச்சிக்கு சென்று, ஆஸ்ட்ரோனட் போல உடையணிந்து கொண்டு, பிரமிட்டின் மினியேச்சர் போல ஏதோ ஒரு கருவியை கையில் வைத்துக்கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறார்கள்
ஆண்டுக்கணக்காக அவர்கள் முயற்சி செய்தும், அந்த மலை உச்சியைவிட்டு அவர்களால் நகரமுடியவில்லை. 20 ஆண்டுகள் கழித்து அப்பாவின் கனவை நிறைவேற்றியே தீர வேண்டும் என சபதம் ஏற்கிறார் மகன். அவரது கணிப்பில் பழனி மலை உச்சிக்கு சென்று முயற்சித்தால் செவ்வாய்க்கு விசா கிடைத்துவிடும் என கண்டுபிடிக்கிறார்.
ஆனால் இதற்கிடையே போதை பழக்கத்துக்கு அடிமையாகும் நாயகன், தன்னை கிண்டல் செய்யும் நண்பனை கொலை செய்துவிட்டு போதை மருந்து மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படுகிறார். பிறகு அங்கிருக்கும் மற்றொரு போதை நண்பருடன் பைக்கில் ஏறி தப்பித்து சென்னையில் இருந்து பழனிக்கு புறப்படுகிறார். அவரது பயணம் மார்ஸ்க்கு போய் முடிகிறதா என்பதே 'சென்னை பழனி மார்ஸ்'.