கேங்ஸ் ஆப் மெட்ராஸ் இயக்குனர் சி.வி குமார் இயக்கத்தில் நடிகர் ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குனரான சி.வி குமார் இப்படத்தினை தயாரிக்க இசையமைப்பாளர் ஹரி டப்ஸ்சியா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படமானது சென்னையில் உள்ள கேங்ஸ்டர் வாழ்க்கையை மையப்படுத்தும் திரைக்கதையில் அமைந்துள்ளது.
கதை
போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனையில் ஆசிய கண்டத்தின் முக்கிய இடமாக சென்னை திகழ்கிறது. வடசென்னை மட்டுமின்றி சென்னை முழுவதும் நடக்கும் இக்குற்றத்தால் போதை கடத்தலில் சென்னை மாநகரம் முதல் இடத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது.
போதை கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் கையில் துப்பாக்கியோ, கத்தி போன்ற பொருட்களை வைத்துக்கொண்டு ரவுடி தோற்றத்தில் இல்லாமல், மக்களுடன் வாழும் சராசரி மனிதர்களாகவும், கார் ஓட்டுநர், மருத்துவர், மளிகை கடை நிர்வாகி, ஜவளி கடை முதலாளி மற்றும் சில துரையின் அதிகாரிகளாகவும் யாரும் கண்டறிய முடியாத அளவில் சமூகத்துடன் சேர்ந்து வாழ்கின்றனர்.
இப்படத்தின் நாயகியாக கல்லூரி மாணவி ஜெயா (பிரியங்கா ருத்) உடன் படிக்கும் மாணவன் இப்ராஹிமை (அசோக்) என்பவரை காதலித்து வருகிறார். இருவீட்டாருக்கும் பயங்கர எதிர்ப்பு என்பதால் வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்கின்றனர். ஜெயா இப்ராஹிமை-ஐ திருமணம் புரிய ரஸியா என்ற பெயரில் மதமாறுகிறார்.
வீட்டைவிட்டு வந்து திருமணம் செய்துகொண்ட இப்ராஹிமுக்கு ராவுத்தர் (வேலு பிரபாகரன்) என்பவரிடம் வேலை கிடைக்கிறது. திடீரென காவலர்களால் இப்ராஹிம் சுட்டு கொல்லப்படுகிறார். இந்நிலையில் செய்வதறியாமல் தவிக்கும் ரஸியா என்கிற ஜெயாவுக்கு இக்கொலைக்கு காரணம் ராவுத்தர் என்பது தெரியவருகிறது. பின்னர் இப்ராஹிம் கொல்லப்பட்டதற்கான காரணத்தையும், இந்த கடத்தல் கும்பலை பற்றி அறியும் ரஸியா அதிர்ச்சி அடைகிறார்.
பின்னர் கடத்தல் கும்பலின் ஒரு புள்ளியான ராவுத்தரையும் அவரது இரண்டு மகன்களையும் கொலை செய்ய முடிவு செய்கிறார் ரஸியா. இறுதியில் அக்கும்பலை பழிவாங்கும் படலமே இப்படத்தின் மீதிக்கதை.