நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ரியோ ராஜ், அறிமுக நடிகை ஷிரின் காஞ்சவாலா, ஆர் ஜே விக்னேஷ்காந்த் நடிக்கும் நகைச்சுவை கலந்த அரசியல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் தமிழ் திரையுலக முன்னணி நடிகருமான சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷபீர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருடன் படத்தொகுப்பாளரான பின்னி ஆலிவர் மற்றும் தமிழ் அரசன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
கதை
ரியோ ராஜ், விக்னேஷ் காந்த் ஆகிய இருவரும் அனாதையாக வளர்ந்த இளைஞர்கள். இவர்களுக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று லட்சியத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இதற்காக இவர்கள் யூ டுப்-ல் சாதிக்க வேண்டும் என அதுவே கதி என சுற்றி வருகிறார்கள். இதற்காக இவர்களுக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட பலவற்றை அண்ணனாக இருக்கும் அரவிந்த் செய்து வருகிறார்.
ஒரு மாலில் பிராங்க் வீடியோ காரணமாக மிகவும் செல்வந்தரான ராதாரவி மற்றும் இப்படத்தின் நாயகி ஷிரின் ஆகியோரை கலாய்க்கிறார்கள். இதில் ஷிரின் ரியோவை அடித்து விடுகிறார். பின்னர் ராதாரவி-யுடன் நல்ல ஒரு அறிமுகம் கிடைக்கிறது.
சில நாட்களில் ராதாரவி, ரியோ மற்றும் ஆர்.ஜே.விக்னேஷை அழைத்து, எதற்காக இதுபோன்று செயல்களை செய்கிறீர்கள் என்று கேட்டகிறார், அதற்கு அவர்கள் எங்களுக்கு அதிகமாக பணம் வேண்டும் என்பதால், இப்படி செய்கிறோம் என்று கூறுகிறார்கள்.
இதனை அறிந்த ராதா ரவி இவர்களுக்கு மூன்று சவால்களை வைக்கிறார். அந்த மூன்று சவால்களை தொடர்ந்து கதை நகைச்சுவையோடு நகர்கிறது.
விளம்பரம்
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதியில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேலும் இப்படமானது 2019 ஜூன் 14ல் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவலை தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன்ஸ் மற்றும் விளம்பர பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.