பரதேசி பாலா இயக்கத்தில் அதர்வா மற்றும் வேதிகா நடித்து 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கான வசனத்தை நாஞ்சில் நாடன் எழுதி, ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பி. எச் டேனியலின் ரெட் டீ என்ற ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டது. தமிழில் இந்நாவலை "எரியும் பனிக்காடு" என்ற பெயரில் இரா முருகவேள் மொழிபெயர்த்திருக்கிறார். 1930 ஆம் ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கதை:
இராசா (ஆதர்வா), பிரித்தானாயர் ஆண்டுவந்த நாட்களில் சென்னை மாகாணத்தின் ஒரு கிராமத்தில் வாழும் ஒரு கவலையற்ற இளம் மனிதர். அந்த கிராமத்தில் வசிக்கும் அங்கம்மா, ராசாவை நேசிக்கிறாள். அங்கம்மாவின் காதலலை அவள் தாய் எதிர்க்கிறாள், காரணம் ராசா ஒரு வேலையில்லாதவன்.
இராசா வேலை தேடி அருகிலுள்ள கிராமத்திற்கு செல்கிறான். அங்கே கங்காணியின் நட்பு கிடைக்கிறது. அவரை தனது கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறான். கங்காணி மலைப்பகுதிகளில் உள்ள பிரிட்டிஷ் தேயிலை தோட்டங்களில் வேலை வாங்கித்தருவதாக கிராமவாசிகளிடம் கூறுகிறார். மேலும் அவர் சரியான விடுதி மற்றும் உயர் ஊதியங்கள் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார்.
இராசா மற்றும் கிராம மக்கள் பலர், கங்காணியின் பேச்சைக் கேட்டு அங்கே வேலைக்கு செல்கிறார்கள், வேலைக்குச் சென்ற இடத்தில் அவர்கள் எதிர்நேக்கும் பிரச்சனைகளையும் மீண்டும் அங்கம்மாவை இராசா சந்தித்தானா என்பதையும் மையமாகக்கொண்டு மீதிக்கதை நகர்கிறது.