தானா சேர்ந்த கூட்டம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் சூர்யாவின் 2D என்டர்டைமன்மேன்ட் நிறுவனம் இணைந்து தாயரிக்கின்றது. இப்படத்தில் ஆர் ஜெ பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
கதை :
வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் தொடங்கிய காலகட்டம் அது. குறைந்த பணிகளுக்காக லட்சக்கணக்கானோர் போட்டிபோடும் சூழலில் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பணம் பெற்றுக்கொண்டு வேலை கொடுத்ததால் தகுதியும், திறமையும் கொண்ட பலர் பாதிக்கப்பட்டனர். அப்படிப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தான் சூர்யாவும் அவரது நண்பர் கலையரசனும். சி.பி.ஐ வேலைக்கு முயற்சி செய்து சி.பி.ஐ மேலதிகாரியாக இருக்கும் ஒருவரின் சுயநலத்தால் வெளியேற்றப்படுகிறார் சூர்யா. கலையரசன், போலீசில் வேலை பெற முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறார். தம்மைப் போல கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும், தகுதியானவர்கள் அரசுப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பும் சூர்யா டீசன்டான ராபின்ஹூட்டாக மாறுகிறார். அவர் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு ஆடும் ஆட்டம் தான் 'தானா சேர்ந்த கூட்டம்.
சூர்யா தன்னுடன் போலி சி.பி.ஐ ஆபிஸர்களாக ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன், சிவசங்கர் மாஸ்டர் ஆகிய நால்வரையும் வைத்துக்கொண்டு, அரசை ஏமாற்றி கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகளாகவும், வருமான வரித்துறை அதிகாரிகளாகவும் நடித்து ரெய்டு நடத்துகிறார்கள். அப்படிக் கொள்ளையடித்த பணத்தை லஞ்சமாக அரசு அதிகாரிகளுக்கே கொடுத்து தகுதியானவர்களை பணியில் சேர்க்கச் சொல்கிறார்கள். அப்படிச் செய்வதால் இவர்களுக்கென வெளியே தெரியாமல் பெரும் ஆதரவு கூட்டம் உருவாகிறது. அடுத்து, தன்னுடன் இருப்பவர்களுக்காக பெரிய பிளான் ஒன்றை செயல்படுத்த நினைக்கிறார் சூர்யா. அப்போது, போலீசுக்கு இவர்களைப் பற்றிய துப்பு கிடைக்கிறது. அதை வைத்து அவர்களை நெருங்குகிறார்கள்.
முதல்பாதியில் சூர்யா தன் நண்பனின் இழப்பினால் எடுக்கும் முடிவு, போலி சி.பி.ஐ ரெய்டு, கீர்த்தி சுரேஷுடன் ரொமான்ஸ், நேர்மையற்ற அரசு அதிகாரிகளுக்கு எதிரான வசனங்கள் என வேகமாகவே நகர்கிறது. பாதியில் சீனுக்கு வரும் போலீஸ் அதிகாரி நவரச நாயகன் கார்த்திக்கிடம் சூர்யா போனில் சவால் விடுவதோடு இன்டர்வெல் ஸ்லைட் போடுகிறார்கள். சூர்யாவின் சவால், போலீசின் சேஸிங் என இன்டர்வெல்லுக்குப் பிறகு படம் வேகமெடுக்கப் போகிறது எனப் பார்த்தால் சுத்த போர். செம பிளானோடு இன்டர்வியூ வைத்து சி.பி.ஐ-க்கு ஆட்களை எடுத்துவிட்டு மிக எளிதாக மாட்டிக்கொள்கிறது சூர்யாவின் டீம். பெரிய நகைக்கடையில் நடக்கவிருக்கும் போலி ரெய்டு காட்சி எதிர்பார்ப்பை உருவாக்கி மொக்கையாகி இருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு செம பல்ப்.