யூ டர்ன் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் சமந்தா நடித்த த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படம் கன்னட படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. கன்னடத்தில் இயக்கிய பவன் குமார் தான் தமிழில் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்திற்கு பூர்ண சந்திரா இசையமைத்துள்ளார்.
கதை :
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் சாலை தடுப்பு கற்களை நகர்த்தி யுடர்ன் எடுத்து செல்கிறார்கள் சில வாகன ஓட்டிகள். இதனால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து கவர் ஸ்டோரி எடுக்க முயற்சிக்கிறார் பத்திரிகையாளர் ரச்சனா (சமந்தா). சாலை விதிகளை மீறிய ஒருவரை பேட்டி எடுக்க சமந்தா முனையும் போது, அந்த நபர் மரணிக்கிறார். இதனால் சமந்தாவை போலீஸ் சந்தேகப்படுகிறது. மேம்பாலத்தில் விதிகளை மீறி யுடர்ன் எடுத்தவர்கள் குறித்து சமந்தா சேகரித்து வைத்திருக்கும் பட்டியலில் உள்ள அனைவருமே மர்மமான முறையில் மரணித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. இந்த மரணங்களுக்கும் சமந்தாவுக்கும் என்ன தொடர்பு என்பதை பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் திரில்லிங்காக சொல்கிறது 'யுடர்ன்'.