வீரமே வாகை சூடும் - இயக்குனர் து.பா. சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயத்தி, யோகி பாபு, ஜெயபாலன் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை நடிகர் விஷால் தனது 'விஷால் பிலிம் பேக்டரி' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ் ரசிகர்கள் கண்டு ரசிக்கும் வண்ணத்தில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் 2022 பிப் 4ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் நடிகர் விஷால் அவரது திரைப்பயணத்தில் நடிக்கும் 31வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு 2021 ஆகஸ்ட் 29ல் தொடங்கி 2022 ஜனவரி 3ல் முடிக்கப்பட்டுள்ளது.
வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் கதை
கதைக்கரு:
ஒரு சாமானிய மனிதனுக்கு அரசியல்வாதி ஒருவருக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் கதைக்கரு. ஒரு சாமானிய குடிமகன் அவருக்கு நடக்கும் அநியாயம் மற்றும் சூழ்நிலையை எப்படி கையாண்டு அதில் இருந்து மீண்டு வருகிறார் என்பதை அதிரடி மற்றும் திரில்லர் கதைக்களத்தில் சொல்வதே வீரமே வாகை சூடும் திரைப்படம்.
கதை:
விஷால் ஒரு காவல் அதிகாரியாக வேண்டும் என்னும் லட்சியத்தோடு எஸ்.ஐ பதவிக்கு தேர்வு எழுதிவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார். விஷாலின் தந்தை மாரிமுத்து போலீஸ் ஏட்டாக காவல் பணியில் இருக்கிறார்.
விஷாலின் தங்கை ரவீனா ரவி கல்லூரியில் படித்து வருகிறார். அவரை ஒருதலையாக காதலித்து வரும் ஒரு ரௌடியின் தம்பி, ரவீனா ரவிக்கு காதல் தொல்லை அளித்தி வருகிறார். இதனை அறியும் விஷால் மற்றும் அந்த ரௌடி இருவரும் ரௌடியின் தம்பியை மிரட்டுகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரௌடியின் தம்பி ரவீனா ரவியை கடத்த திட்டமிடுகிறார்.
எதிர்பாராத விதமாக ரவீனா ரவியை வேறு ஒரு கும்பல் கடத்தி செல்கிறது. அந்த கும்பல் யார்? எதற்காக ரவீனா ரவியை கடத்தியுள்ளனர்? விஷால் அவர்களை எவ்வாறு கண்டு பிடித்தார்? இந்த கடத்தலுக்கு பின்னணி என்ன? என்பதே வீரமே வாகை சூடும் படத்தின் கதை.