நீ தானே என் பொன்வசந்தம் என்பது 2012-ம் ஆண்டு வெளியான ஒரு இசை காதல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம், ஒரே நேரத்தில் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகி உள்ளது. கௌதம் மேனன் எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஜீவா, சமந்தா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
கதை:
சிறு வயதிலிருந்தே வருணும் (ஜீவா), நித்யாவும் (சமந்தா) நண்பர்களாக இருக்கின்றனர். பிறகு சிறு பிரச்சினையில் இருவரும் சண்டையிட்டு பிரிகிறார்கள். மீண்டும் பள்ளியில் படிக்கும்போது ஒரே தனிப்பயிற்சிக்கூடத்தில் படிக்கின்றனர். பழைய பகையை மறந்து மீண்டும் நட்பாக பழகுகின்றனர். இந்த நட்பு சிறிதுகாலம் வரை தொடர்கிறது. அதன்பின் மீண்டும் பிரிகின்றனர்.
அதன்பிறகு தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள் இருவரும் பல கல்லூரிகள் பங்கேற்கும் விழாவில் நேரிடையாக சந்திக்கின்றனர். அப்போது, தங்களுடைய பகையை மறந்து நெருக்கமாக பழகுகின்றனர். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. கல்லூரி முடிந்து வெளிவந்த பின்பும் தொடர்ந்து காதலிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் மீண்டும் பிரச்சினைகள் வர சண்டைபோட்டு பிரிகிறார்கள்.
பல வருடங்கள் கழித்து, தனது காதலியான நித்யாவைப் பார்க்க ஒரு கடலோரக் கிராமத்திற்கு வருண் வருகிறார். அங்கு இருக்கும் நித்யாவைச் சந்திப்பதற்காக சில நாட்கள் அங்கேயே தங்கிவிடுகிறார். நித்யாவைச் சந்தித்து பேசும்போது, மீண்டும் இருவருக்கும் சண்டை வருகிறது. அதனால், மறுபடியும் பிரிந்து செல்கிறார்கள்.
சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் சந்திக்கின்றனர். வருண் தன்னுடைய திருமணத்தை பழைய காதலியான நித்யாவுக்காக நிறுத்துகிறார். இருவரும் இணைகின்றனர்.