X
பொன்னியின் செல்வன்
Action | Drama | Period | 30 Sep 2022 | U/A | 167 Mins
Tamil

பொன்னியின் செல்வன் கதை

பொன்னியின் செல்வன் (PS 1) (முதல் பாகம்) - இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள தமிழர்களின் வரலாற்று திரைப்படம். பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுத்தாளர் கல்கி எழுதியுள்ளார், கல்கி எழுதிய இந்த கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

வரலாற்று படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய முன்னணி தயாரிப்பாளரான சுபாஷ்கரன் தனது 'லைக்கா புரோடக்ஷ்ன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

லைக்கா - மணிரத்னம் - ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், இரண்டு பாகங்களாக உருவாகி வெளிவரவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் உருவாகி ஒரு பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தினை மணி ரத்னம் தனது 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனத்தின் மூலம் ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் தயாரித்து, லைக்கா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார், பின் லைக்கா நிறுவனம் இப்படத்தினை உலகம் முழுவதும் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் பொன்னியின் செல்வன் படத்தினை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.




பொன்னியின் செல்வன் கதை

சோழ தேசத்து (முடி சூடா மன்னன் & இளவரசன்) ஆதித்ய கரிகாலன் (விக்ரம்) சோழ தேசத்தை சூழ்ச்சிகள் சூழ்ந்துள்ளது என கண்டறிகிறார். இந்த செய்தியை ஒரு மடலில் கடிதமாக குறித்து அந்த கடிதத்தை சோழ தேசத்து இளவரசியும் தன் தங்கையும் ஆனா குந்தவை (திரிஷா)-விடம் சேர்க்க வேண்டும் என தன் நண்பனான வந்தியத்தேவன் (கார்த்தி)-யிடம் ஒப்படைக்கிறார்.

வந்தியத்தேவன் அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு தஞ்சை நோக்கி பயணிக்கிறார். பல பிரச்சனைகளை கடந்து வந்தியத்தேவன்  அந்த கடிதத்தை குந்தவையிடம் சேர்கிறார். பின் குந்தவை ஒரு கடிதத்தை கொடுத்து இதனை என் தம்பி சோழ தேசத்து இளவரசன் அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி)-யிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறுகிறார். 

வந்தியத்தேவன் குந்தவை கொடுத்துள்ள கடிதத்தை ஏற்று கொண்டு இலங்கை நோக்கி பயணிக்கிறார். இலங்கையில் உள்ள அருள்மொழி வர்மன்-யை சந்தித்து அவரிடம் இந்த கடிதத்தை கொடுத்துவிட்டு, அருள்மொழி வர்மனை கையேடு தஞ்சை அழைத்து வரவேண்டும் என்பதே குந்தவை வந்தியத்தேவனுக்கு கொடுத்திருக்கும் ஆணை.

இலங்கையில் நடக்கும் ஒரு பிரச்சனை காரணமாக அருள்மொழி வர்மன் - வந்தியத்தேவனுடன் தஞ்சைக்கு வர மறுக்கிறார். பின் வந்தியத்தேவன் தனியாக தஞ்சை வருகிறார். ஆதித்ய கரிகாலன் (விக்ரம்)யை சிலர் சூழ்ச்சி செய்து கொலை செய்து விடுகின்றனர். அண்ணனை கொலை செய்த எதிரிகளை பழிவாங்கிவிட்டு அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி) ராஜா ராஜா சோழனாக அரியணை ஏறுகிறார். இதுவே பொன்னியின் செல்வன் நாவலின் கதை.

பொன்னியின் செல்வன் (Ps 1) திரைப்படத்தின் கதை

ஆதித்த கரிகாலன் (சியான் விக்ரம்), பார்த்திபேந்திர பல்லவன் (விக்ரம் பிரபு) உடன் இணைந்து ஒரு பிரம்மாண்ட போரில் எதிரி நாடுகளை கைப்பற்றுகிறார். அந்த போரில் கடைசியாக ஆதித்த கரிகாலனுக்கு கை கொடுக்கும் விதமாக வந்தியத்தேவன் (கார்த்தி) அசத்தல் என்ட்ரி கொடுக்கிறார். போர் முடிந்ததும் ஆதித்த கரிகாலனின் 2 முக்கிய ஓலைகளை எடுத்துக் கொண்டு தஞ்சை புறப்படுகிறார் வந்தியத்தேவன். 

பொன்னி நதி பாடல் முடிந்ததும் ஆழ்வார்க்கடியன் நம்பி (ஜெயராம்) வைணவம் தான் பெரியது என சைவ முனிவர்களுடன் சண்டை போடுவதை பார்த்த வந்தியத்தேவன் உள்ளே புகுந்து அரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு என்கிற வசனத்தை பேசி அந்த பஞ்சாயத்தை முடித்து வைக்கிறார்.

குறுநில மன்னரான பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்) சோழ தேசத்து தன அதிகாரியாக உள்ளார். வயதான காலத்தில் இளம் பெண் நந்தினியை திருமணம் செய்து கொண்டு போகும் இடங்களுக்கெல்லாம் பல்லக்கில் அவரையும் கொண்டு போகிறார் என்கிற அவச்சொல் வருகிறது. ஆனால், கடம்பூர் மாளிகையில் குறவைக் கூத்துடன் பெரிய சதித்திட்டமே போடுகிறார் பெரிய பழுவேட்டரையர். இதனை வந்தியத்தேவன் மற்றும் ஆழ்வார்க்கடியன் நம்பி மறைந்திருந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

சுந்தர சோழருக்கு பிறகு பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலன் தான் அரியணை ஏற நேரிடும். ஆனால், அந்த அரியணைக்கு சொந்தக்காரன் நான் தான் என சுந்தர சோழரின் சகோதரர் மதுராந்தகன் (ரகுமான்) கூற அவருக்காக ஆதித்த கரிகாலனை கொல்லத் தான் அந்த ஆலோசனை கூட்டத்தில் சதி செய்யப்படுகிறது.

பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்டு சோழ தேசத்துக்கு நந்தினி (ஐஸ்வர்யா ராய்) வருவதே அவரது கணவன் வீர பாண்டியனை கொன்ற ஆதித்த கரிகாலனை கொல்லத் தான். பாண்டிய தேசத்தின் ஆபத்துதவிகளான ரவிதாசன், சோமன் சாம்பவன் உள்ளிட்டோர் மறைமுகமாக நந்தினிக்கு உதவி செய்கின்றனர். ஆதித்த கரிகாலனையும் அருண்மொழி வர்மனையும் கொல்ல பல சதித்திட்டங்களை போட்டு வருகிறார் நந்தினி. மேலும், நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் இடையே பால்ய காதல் ஒன்றும் காட்டப்படுகிறது.

ஆதித்த கரிகாலனையும், அருண்மொழி வர்மனையும் சோழ தேசத்துக்கு வரவழைத்து நந்தினியின் சதித் திட்டத்தையும் இங்கே நிலவும் பிரச்சனையையும் சரி செய்ய வந்தியத்தேவனை இலங்கைக்கு அனுப்புகிறார் குந்தவை (த்ரிஷா). ஆதித்த கரிகாலனை அழைத்து வர அவரே காஞ்சிக்கு செல்கிறார்.

அருண்மொழி வர்மன் என்றே தெரியாமல் அவருடன் சண்டை போடும் வந்தியத்தேவன் அதன் பின்னர் புரிந்து கொள்கிறார். ரவிதாசன் (கிஷோர்) ஆட்கள் அருண்மொழியை கொல்ல முயற்சிக்க மந்தாகினி (வயதான ஐஸ்வர்யா ராய்) அருண்மொழியை காப்பாற்றுகிறார். சீனத் துறவிகளின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் அருண்மொழி அப்பாவின் கைது கட்டளையை ஏற்று சோழ தேசத்துக்கு வந்தாரா? நந்தினி ஆதித்த கரிகாலனை கொல்ல போட்டம் திட்டம் என்ன ஆனது என்பதுடன் முதல் பாகம் முடிகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் பிரத்யேக தகவல்கள்

கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் நாவலை படித்து, இந்த கதையை படமாக எடுக்க வேண்டும் என பல தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் முயற்சித்துள்ளனர். முதலில் எம் ஜி ஆர், பின் பாரதிராஜா, கமல்ஹாசன் என பலர் முயற்சித்தும் இந்த கதை படமாக உருவாகவில்லை.

 
மணிரத்னம் இயக்கிய இப்படத்தில், முதலில் விஜய், மகேஷ் பாபு என பலர் நடிக்கவிருந்தனர். இறுதியில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. விக்ரம் - ஆதித்ய கரிகாலன், ஜெயம் ரவி - அருள்மொழி வர்மன் (ராஜா ராஜா சோழன்), கார்த்தி - வந்தியத்தேவன் என இவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கொரோன நோய் பரவல் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு செயலுக்கு வந்தது. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு சற்று பாதித்தது. இப்படத்தினை இயக்குனர் மணிரத்னம் 500 கோடி பொருட்செலவில் ஒரே படமாக உருவாக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் இப்படத்தின் கதையில் உள்ள சுவாரஸ்யத்தின் அழுத்தத்தால் அதே 500 கோடி பட்ஜெட்-ல் இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார், மணி ரத்னம்.

பொன்னியின் செல்வன் ரிலீஸ்

பொன்னியின் செல்வன் (Ps 1) திரைப்படம் 30 செப்டம்பர், 2022ல் உலகமுழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புவதற்கான உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. 

இப்படத்தின் டிஜிட்டல் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை 125 கோடிகளுக்கு அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் பெற்றுள்ளது. 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+