‘சர்தாரை’ப் பார்ப்பதற்காக வீட்டை விற்று டிக்கெட் வாங்கிய வெறித்தனமான பவர்ஸ்டார் ரசிகர்!
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் பவர்ஸ்டார் பவன் கல்யாணின் சர்தார் படத்தைப் பார்ப்பதற்காக ஆந்திராவில் ரசிகர் ஒருவர் வீட்டை விற்று படத்திற்கான டிக்கெட்டை வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இன்று தெலுங்கில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாணின் சர்தார் கப்பர் சிங் 2 படம் உகாதி திருநாளை முன்னிட்டு இன்று ரிலீசாகியுள்ளது.
தெலுங்கு திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இப்படம். முதல்நாளான இன்று அப்படத்தின் டிக்கெட்டுகள் இரண்டாயிரம், மூவாயிரம் என அதிக விலைக்கு விற்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

தீவிர ரசிகர்...
இந்நிலையில் ஆந்திர மாநிலம் குர்னூல் பகுதியைச் சேர்ந்த பவன் கல்யாணின் தீவிர ரசிகர் ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து இப்படத்தைப் பார்ப்பதற்காக குறிப்பிட்ட ஒரு திரையரங்கில் மொத்தமாக அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

வீட்டை விற்று...
இதற்கான பணத்திற்காக தனது வீட்டை அவர் ரூ. 10 லட்சத்திற்கு விற்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல், ஹைதராபாத்தில் ரசிகர் ஒருவர் பத்தாயிரம் ரூபாய்க்கு சர்தார் பட டிக்கெட்டை வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வதந்தி...
ஆனால், சம்பந்தப்பட்ட ரசிகரைப் பற்றி மேலும் விபரங்கள் ஏதும் வெளியாகாததால் இது வதந்தியாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்படி கொளுத்தி போட்டுள்ளனர் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

காஜல் ஜோடி...
இப்படியாக ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை பாபி இயக்கியுள்ளார். பவன் கல்யாணிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











