என்னை அறிந்தால் திருட்டு வீடியோ.. போலீசில் புகார்.. இதானா உங்க டக்கு!
சென்னை: அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் திருட்டு வீடியோ இணையத்தில் வெளியானதை தடுக்கக் கோரி காவல் துறையிடம் மனு கொடுத்தனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, துணை தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் மற்றும் நடிகர் அஜீத் நடித்து சமீபத்தில் வெளியாகி உள்ள 'என்னை அறிந்தால்' படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு மாநில திருட்டு வி.சி.டி. ஒழிப்பு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் எஸ்.தாணு, ஏ.எம்.ரதினம் ஆகியோர் கூறுகையில், "என்னை அறிந்தால் படத்தின் திருட்டு வி.சி.டி. வெளியாவதை தடுக்கும் பொருட்டு முன்கூட்டியே திருட்டு வி.சி.டி. ஒழிப்பு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் எங்களிடம் மனுவை பெற்றுக்கொண்டு, எங்கள் பிரச்சினைகளை சுமார் 1 மணி நேரம் கேட்டார்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் போலீசார் திருட்டு வி.சி.டி. ஒழிப்பு பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள்.
'என்னை அறிந்தால்' படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளதை தடுக்கவும் போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் 'என்னை அறிந்தால்' படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தியேட்டர் மூலம் திருட்டு வி.சி.டி. தயாரிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளோம். அந்த தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், எங்கள் புகார் மனுவில் வற்புறுத்தி இருக்கிறோம். கேரள போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக, சூப்பிரண்டு ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த தியேட்டர் உரிமையாளரிடம் உரிய நஷ்ட ஈட்டை வசூலிக்கவும் உதவி செய்ய கேட்டுள்ளோம். திருட்டு வி.சி.டி. தயாரிக்க உதவும் சினிமா தியேட்டர்கள் மீது போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
என்னை அறிந்தால் திருட்டு டிவிடி படம் வெளியாகும் முன்பே ரிலீசாகிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தயாரிப்பாளரோ, இரண்டு வாரங்கள் கழித்துதான் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications












