'கெட்டவன்' நிறுத்தம்?
| Click here for more images |
கெட்டவன் படம் குறித்த அறிவிப்பு வந்தது முதலே பல்வேறு கிசுகிசுக்கள், வதந்திகளும் கூடவே கிளம்பி வந்தன. சிம்பு, நயனதாராவின் காதல் கதைதான் இந்தப் படத்தின் கதை என்று பேச்சு எழுந்தது. இதனால் வெகுண்ட நயனதாரா இப்படத்தை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்று நயனதாரா கூறி விட்டார்.
இந்த நிலையில் கெட்டவன் என்றால் பெண்ணால் கெட்டவன், பெண்ணை நம்பிக் கெட்டவன் என்று பொருள் என சிம்பு படம் குறித்து விளக்கம் தந்தார். படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் கேட்டபோதும், இதே விளக்கத்தைக் கூறி படப் பெயரை மாற்ற முடியாது என்று கூறி விட்டார்.
அதன் பின்னர் படத்தில் நாயகி லேகா வாஷிங்டன் இருக்கிறாரா, இல்லையா என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் தான் படத்தில் இருக்கிறேன் என்று கூறினார் லேகா. ஆனால் பிறகு இல்லை என்று கூறி விட்டார். ஆனால் இதுவரை நாயகி விவகாரம் குறித்து சிம்பு வெளிப்படையாக எதையும் கூறவில்லை.
இந்த நிலையில் இப்படத்தை மேற்கொண்டு வளர்க்க சிம்புவுக்கே விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கெட்டவன் படம் குறித்து அறிந்த சிலரிடம் நாம் கேட்டபோது, படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே மாறி விட்டார். புதிய தயாரிப்பாளர் செலவு செய்ய யோசிக்கிறார். எனவே இந்தப் படம் இப்போதைக்கு வளருவது போலத் தெரியவில்லை.
இப்போதைக்கு படத்தை நிறுத்தி வைத்து விட்டு, அடுத்த ஆண்டு வாக்கில்தான் படப்பிடிப்பை தொடருவார்கள் எனத் தெரிகிறது என்றனர்.
இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது, நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதற்கிடையில் சிலம்பாட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள எனது புதிய படம் நவம்பர் 12ம் தேதி தொடங்குகிறது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் இதைத் தயாரிக்கிறார்கள் என்றார்.
சிலம்பாட்டத்தை முன்னாள் நடிகை சங்கீதாவின் கணவரும், கேமராமேனுமான சரவணன்தான் இயக்குகிறார். இது அவருக்கு முதல் படம். இந்தப் படத்தில் சிம்புவுடன் ஷ்ரியாவை ஜோடி சேர்க்க முயலுகிறார்கள். இதற்காக ஷ்ரியாவுக்கு பெரும் சம்பளம் பேசப்பட்டு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











