Vijay: படம் முழுக்க சரக்கு.. பாட்டிலுக்கு 10 ரூபாய்னு பாட்டு கேக்குதா? விஜய்யை விளாசிவிட்ட வி.சேகர்!
சென்னை: நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்த பின்னர் அவர் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பின்னர் அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு பரவலாக வெளிப்படையாக இருந்தாலும், விஜய் தரப்பில் இருந்தோ, அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்தோ இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. இப்படி இருக்கும்போது மூத்த இயக்குநர் வி.சேகர் அளித்த பேட்டியில் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார்.
அதாவது அவர் பேசுகையில், " சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர் என்றால் அனைவரும் எம்.ஜி.ஆரைச் சொல்லுவார்கள். ஆனால் அவர் சினிமாவிற்குள் மிகவும் தாமதமாகத்தான் வருகிறார். ஆனால் அவரும் அவரது குடும்பமும் அடிப்படையில் காங்கிரஸ்காரர்கள். விஜய் தனது பிரச்சாரத்தில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று சொல்லி பேசுகிறார். ஆனால் அவரது படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இவையெல்லாம் விஜய் தனது படங்களில் தவிர்த்திருக்க வேண்டும் அல்லவா?
பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பேசும்போது உங்கள் படங்களில் அந்த கருத்து வந்திருக்க வேண்டும் அல்லவா? விஜய் படத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் அனைத்தும் காட்டுகிறார்கள், அதெல்லாம் எதற்காக, நான் அவரது படங்கள் அனைத்திலும் பார்க்கிறேனே. இதையெல்லாம் அவர் தவிர்த்திருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை? அது எதற்கு விளம்பரம், விளம்பர காசுக்காகவா? இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

மதுபானக் கடைகள்: எம்.ஜி.ஆர் படங்களில் இதைப் பார்க்க முடியுமா? திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் மது அருந்துவது போன்ற காட்சியில் நடிக்காததற்கு காரணம், மக்கள் அதைப் பார்த்து கெட்டுப் போவார்கள் என்பதால்தான். அவரே அரசியலுக்கு வந்த பின்னர், மதுபானக் கடைகளை திறக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது மிகவும் வருத்தப்பட்டார். அப்போது அவர், ' எனக்கு இதுபோன்ற தர்மசங்கடமான சூழ்நிலை வந்தது இல்லை. நான் படங்களில் மது அருந்த கூடாது என்று கூறினேன். ஆனால் அரசியலில் அப்படி இல்லை, இங்கு ஆட்சியை நடத்த போதிய அளவுக்கு பணம் இல்லை என்று கூறுகிறார்கள். இது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இங்கு மதுப் பழக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்கனவே கொண்டுவந்துவிட்டார்கள்' என்று சொன்னார்.
சத்துணவு: மதுபானம் விற்று வந்த பணத்தைக் கொண்டு ஏழைக் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டார். அதேபோல், அந்த பாவத்தைப் போக்க பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். விஜய் தனது படங்களில் வெளிநாட்டு மதுபானங்களை எல்லாம் காட்டுகிறார். ஆனால் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாடுகிறார். அவரது சொல்லும் செயலும் வேறு வேறாக உள்ளது. இன்றைக்கு ஆட்சியில் உள்ள திமுகவை அவரால் வெல்ல முடியும் என்பதே பொய்.

சில்க் ஸ்மிதா: கூட்டம் காட்டிவிட்டார் என்பதற்காக அவர் ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்று இல்லை. நான் சில்க் ஸ்மிதாவை வைத்து படம் எடுத்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பை பார்க்க அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து எல்லாம் வந்துவிட்டார்கள். சில்க் குடித்துவிட்டு மிச்சம் வைத்த கூல்டிரிங்ஸை தொட்டு சுவைத்த ஊர் பெரிய மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள்" என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











