விஜய்யைத் தொடர்ந்து அஜீத்தை இயக்கும் அட்லீ?
சென்னை: விஜய்யைத் தொடர்ந்து அஜீத்தை, அட்லீ இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. 'ராஜா ராணி'யால் நயன்தாராவை தமிழ் சினிமாவுக்கு மீட்டுக் கொடுத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

விஜய்யை வைத்து இவர் இயக்கிய தெறி விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் விஜய்-அட்லீ இருவரும் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின.
அப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கப் போவதாகவும் அனேகமாக 'தெறி 2' வது பாகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்குப் பின் விஜய்-அட்லீ படம் துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அஜீத்தின் புதிய படத்தை அட்லீ இயக்கப் போவதாக புதிய தகவல்கள் கசிந்துள்ளன.
அஜீத் ஓய்வில் இருந்தபோது அட்லீயை தனது இல்லத்திற்கு வரவழைத்து தனக்கு ஏற்றமாதிரி கதை இருந்தால் கூறுமாறு கேட்டாராம்.
அட்லீ உடனடியாக ஒரு கதையை சொல்ல அந்தக் கதை அஜீத்திற்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டதாம். அதனால் அடுத்தடுத்த பட வேலைகளை உடனடியாகத் துவங்குமாறு அஜீத் கூறிவிட்டாராம்.
இதனால் அஜீத்தை வைத்து அட்லீ இயக்கும் படம் சிவா படத்திற்குப் பின் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











