பசுமை நாயகன்.. என்றும் பசுமரத்தாணி போல நினைவில் இருப்பார்.. விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் மூழ்கடித்து மறைந்து விட்டார் மக்கள் கலைஞன் விவேக்.
Recommended Video
அப்துல் கலாமின் சீடராக தன்னை மாற்றிக் கொண்டு அவர் நட்டு வைத்த பல லட்ச மரக் கன்றுகள் விவேக்கின் மூச்சுக் காற்றை நமக்கு ஆக்ஸிஜனாக எப்போதும் வழங்கிக் கொண்டே இருக்கும்.
மறைந்தாலும் மக்களை என்றுமே தனது திரைப்படங்கள் மூலமாக சிரிக்க வைத்து வரும் சின்னக் கலைவாணர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை ரசிகர்கள் நினைத்து உருகி வருகின்றனர்.

விவேகானந்தன்
தென்காசி, சங்கரன்கோவில் 1961ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி பிறந்த விவேகானந்தன் சினிமாவில் தனது பெயரை விவேக் என சுருக்கிக் கொண்டு நடித்து மக்களை மகிழ்வித்து வந்தார். இயக்குநர் கே. பாலசந்தர் அறிமுகப்படுத்திய அற்புதக் கலைஞன் நடிகர் விவேக். 1987ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விவேக்.

சின்ன கலைவாணர்
சினிமாவில் வெறும் அடுத்தவர்களை கலாய்த்து மற்றவர்களை சிரிக்க வைப்பதை விடுத்து சமூக பிரச்சனைகள் நையாண்டி செய்து சமூக கருத்துக்களை காமெடி மூலமாக திணித்த கருத்து கந்தசாமியாக மாறிய விவேக்கை மக்கள் சின்ன கலைவாணர் என்றே பட்டப் பெயர் வைத்து அழைத்தனர். சாமி, பாளையத்தம்மன் உள்ளிட்ட பல படங்களில் அவரது கருத்துள்ள காமெடிகள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

ஹீரோ விவேக்
என்.எஸ். கிருஷ்ணன், நாகேஷ், சந்திரபாபு, கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், சூரி, சதீஷ் என அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். நடிகர் விவேக்கும் சில படங்களில் ஹீரோவாக அசத்தி உள்ளார். 1991ம் ஆண்டு ராமநாராயணன் இயக்கத்தில் வெளியான செந்தூர தேவி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் விவேக். விரலுக்கேத்த வீக்கம், ஷக்கலக்க பேபி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, நான் தான் பாலா, பாலக்காட்டு மாதவன், எழுமின், வெள்ளைப்பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில், வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தில் விவேக் செய்யும் புலன் விசாரணை வேற லெவலில் இருக்கும்.

பசுமையின் நாயகன்
சினிமாவை விட ரியல் லைஃப்பில் நடிகர் விவேக் ரியல் ஹீரோவாகவே வாழ்ந்துள்ளார். ஏபிஜே அப்துல் கலாமின் கொள்கைகளையும் தனது பெயர் கொண்ட விவேகானந்தரின் கொள்கைகளையும் கடைபிடித்து வாழ்ந்தார். பல லட்ச மரக்கன்றுகளை தமிழ்நாடு முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக்கை பசுமையின் நாயகன் என்றே அவரது ரசிகர்கள் முதலாம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வருகின்றனர்.
59 வயதில் மறைவு
கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் திடீர் மரணம் அடைந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விவேக் மறைவுக்கு பின்னர் அவர் நடிப்பில் உருவாகி இருந்த அரண்மனை 3 படம் வெளியானது. தி லெஜண்ட் படத்திலும் விவேக் நடித்திருந்த காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு திரை பிரபலங்களும் ரசிகர்களும் சின்னக் கலைவாணருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











