வாரிசு படப்பிடிப்பு தளத்தில் யானைகள் பயன்படுத்தப்பட்டதா? செய்தியாளர்களை தாக்கியதாக பரபரப்பு புகார்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள இவிபி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரம்மாண்ட செட் போட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 5, 6 யானைகள் படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
அதை அறிந்து கொள்ளவே தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சிலர் அங்கே ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட நிலையில், இரு தரப்பும் போலீஸில் பரபரப்பு புகார்களை அளித்துள்ளனர்.

யானைகள் பயன்படுத்தப்பட்டதா
வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. யானை உள்ளிட்ட மிருகங்களை பயன்படுத்த சினிமாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அனுமதியின்றி வாரிசு படத்துக்காக நூற்றுக்கணக்கான மாடுகளும், 5,6 யானைகளும் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலின் உண்மைத் தன்மையை கண்டறிய ஒரு செய்திக்குழு சென்றது பரபரப்பை கிளப்பி உள்ளது.

ட்ரோன் பயன்படுத்தி
ஷூட்டிங் நடக்கும் பகுதிக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், ட்ரோன் கேமராவை பயன்படுத்தி தனியார் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர்கள் சிலர் படம் பிடித்துள்ளனர். உடனடியாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டதும் அந்த செய்தியாளர்களை தாக்கி கேமராக்களை பிடுங்கி உள்ளனர்.

செய்தியாளர்கள் புகார்
செய்தியாளர்கள் கடத்தப்பட்டதாக காட்சிகள் அந்த தனியார் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற நசரத்பேட்டை காவல் துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் ஸ்டேஷன் வர சொல்லி உள்ளனர். தங்களை காரில் அழைத்துச் சென்று தாக்கியதாக செய்தியாளர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

விஜய் தரப்பும் புகார்
அனுமதியின்றி விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்திற்கு மேலே ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு படக் காட்சிகளை செய்தியாளர்கள் லீக் செய்ய முயற்சித்துள்ளனர் என விஜய் தரப்பும் புகார் அளித்துள்ளது. இதுதொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர் நசரத்பேட்டை போலீஸார்.

தேவையில்லாத சிக்கல்
விஜய்யின் வாரிசு படத்துக்கு ஏற்கனவெ ஏகப்பட்ட சிக்கல் உள்ள நிலையில், செய்தியாளர்களை தாக்கிய விவகாரம் பெரிய பிரச்சனையை கிளப்பி உள்ளது. மேலும், யானைகள் மற்றும் விலங்குகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டனவா? இல்லையா? என்பது குறித்த விசாரணையும் மேற்கொள்ள காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











