உடைந்த சுவர்களுக்காக மட்டுமல்ல... உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா
சென்னை: பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மட்டுமல்ல, எல்லா மூலைகளிலும் உடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என நடிகை திரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரீஸில் நேற்று அடுத்தடுத்து நடந்த தீவிரவாதத் தாக்குதல் நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு உலகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரீஸ் தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்களும் தங்களது கண்டனங்களையும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தொடர்பான புகைப்படச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெய்ருட் குண்டுவெடிப்பு...
அதில், ‘பாரிசின் கால்பந்து மைதானத்திலும், இசை அரங்கத்திலும் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலையும், துப்பாக்கி சூட்டையும் கண்டு துயரம் அடையும் நமக்கு, இந்தத் தாக்குதலுக்கு இரு தினங்கள் முன்னர் பெய்ருட்டில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி தெரியாமல்போனது வருத்தத்திற்குரியது. ஏனெனில், அதில்தான் வெள்ளையர் ஒருவரும் உயிரிழக்கவில்லையே..!

அகதிகளா காரணம்...?
பாரிசின் தாக்குதலுக்கு ‘அகதிகள் பிரச்சனையே காரணம்' என குற்றம் கூறுவதை நிறுத்துவோம். ஏனெனில், அவர்களும் இதேபோன்ற குண்டு வெடிப்புகளுக்கும், துப்பாக்கிச் சூடுகளுக்கும் பயந்தே, தமது சொந்த ஊரை விட்டு தலைதெறிக்க ஓடி வருகின்றனர்.

பாதையில்லா பயணம்...
தோளில் ஒரு பையுடன், நீண்ட நடைப்பயணம் மேற்கொள்ளும் அவர்களுக்கு செல்லும் பாதையைப் பற்றியோ, அந்த இடத்துக்குள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவோமா? என்பது பற்றியோகூட தெரிவதில்லை.

உடைந்து கொண்டிருக்கும் உலகம்...
ஆகவே, உடைந்துபோன கட்டிடங்களுக்காக மட்டும் பிரார்த்தனை செய்யாதீர்! எல்லா மூலைகளிலும் உடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!

அகதிகளுக்காக பிரார்த்தனை...
மேலும், வீடிழந்து, நாடிழந்து, உற்றார் உறவினரை இழந்து தங்குவதற்கு நிழற்கூரைகூட இல்லாது தவிக்கும் அகதிகளுக்காவும் பிரார்த்தனை செய்யுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இரங்கல்...
திரிஷாவைப் போலவே பிரபல நடிகைகளான அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, இலியானா போன்றோரும் சமூகவலைதளப் பக்கத்தில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











