இரண்டு விஜய் மக்கள் இயக்கமா... அப்பா–மகன் வழக்கால் குழம்பிய ரசிகர்கள்
சென்னை : தமிழில் மட்டுமின்றி தென்னிந்தியாவின் டாப் ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Recommended Video
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலிலேயே விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான வேலைகளையும் விஜய் மக்கள் இயக்கம் ரகசியமாக செய்து வந்ததாகவும், ஆனால் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது, பிறகு அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என ரஜினி கூறினாலும் எந்த கட்சிக்காவது ஆதரவு தருவார் என நினைத்து விஜய் தேர்தலில் போட்டியிடாமல் பின் வாங்கியதாக ஒரு தகவல் கூறப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அமைப்பை தேர்தல் கமிஷனில் பதிவு செய்தார். தலைவராக இயக்குனர் சந்திரசேகர், பொருளாளர் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடவில்லை, குறைந்தபட்சம் வர போகும் உள்ளாட்சி தேர்தலிலாவது விஜய் போட்டிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

விஜய் போட்ட வழக்கு
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, தனது பெயர் மற்றும் புகழை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தி வருவதாக எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா உள்ளிட்ட 11 பேர் மீது விஜய் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எஸ்ஏசி.,யின் பதில் மனு
நடிகர் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக எஸ் ஏ சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2021 பிப்ரவரி 28ம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர்களில் இருந்தும் விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு
மேலும், அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

2 விஜய் மக்கள் இயக்கமா
இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டது. எனது தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தரப்பில் கூறப்பட்ட இந்த விளக்கத்தால், அப்படி என்றால் இத்தனை நாட்களாக எஸ்ஏசி தலைமையில் ஒரு விஜய் மக்கள் இயக்கமும், விஜய் தலைமையில் மற்றொரு விஜய் மக்கள் இயக்கமும் இயங்கி வந்ததா என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வழக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

பின்னணி காரணம் என்ன
கடந்த 2 ஆண்டுகளாக அரசல் புரசலாக இருந்து வந்த அப்பா - மகன் மோதல் விவகாரம், தற்போது கோர்ட் வரை சென்றுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. அப்பா - மகன் இடையேயான பிரச்சனையின் பின்னணியில் வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற சந்தேகமும் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











