தென்னிந்திய அளவில் ஸ்டாராகிவிட்டாரா விஜய்?
தமிழ் சினிமா நடிகர் என்ற அளவிலிருந்த ரஜினிகாந்த், 1978-ல் சூப்பர் ஸ்டாரானார். 80களில் தென்னிந்திய நடிகரானார். 80களின் பிற்பகுதியில் இந்திய அளவில் நடிகரானார். இன்று சர்வதேச மார்க்கெட்டில் அவர் படங்கள் பிரதான இடத்தைப் பிடிக்கின்றன.
அதே ரூட்டில்தான் நடிகர் விஜய்யும் தன் பயணத்தைத் தொடங்கினார். முதலில் காதல், ஜாலி படங்கள் பண்ணிக் கொண்டிருந்தவர் ரஜினி பாணியில் ஆக்ஷன், ஆக்ஷன் - காமெடி என ரூட் பிடித்தார்.

கேரளாவில்
ஆரம்பத்தில் தமிழகத்தோடு நின்ற விஜய் படங்கள், குஷிக்குப் பிறகு கேரளாவில் காலூன்றின. கேரளாவில் ஒரு மலையாளப் படத்துக்கு நிகராக ஓடியது குஷி. இங்கே தோல்வியடைந்த ஆதி படம் கூட கேரளாவில் நல்ல வசூல் தந்தது. இப்போது விஜய் படங்களை மோகன்லால் போன்ற மெகா ஸ்டார்களே வாங்கி வெளியிடும் அளவுக்கு நிலைமை உள்ளது.

கர்நாடகா
அடுத்து கர்நாடகத்திலும் விஜய் படங்கள் ஓட ஆரம்பித்தன. தெறி அங்கு நல்ல வசூலைப் பெற்றது. இப்போது மெர்சல், ரஜினிகாந்த் படத்துக்கு இணையாக அங்கு ஓடியுள்ளது.

தெலுங்கு
விஜய்க்கு பிடிபடாமல் இருந்தது தெலுங்கு மார்க்கெட்தான். அங்கு இவர் படங்கள் டப் செய்யப்பட்டாலும் பெரிதாக ஓடியதில்லை. காரணம், பெரும்பாலான விஜய் படங்கள் தெலுங்கு படங்களின் ரீமேக்குகள். இப்போது அந்தக் குறையை மெர்சலின் தெலுங்குப் பதிப்பு அதிரிந்தி போக்கியிருக்கிறது.

வெற்றி
400 முதல் 500 அரங்குகளில் ஆந்திரா, தெலங்கானாவில் அதிரிந்தி வெளியானது. முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்களுக்கு இணையாக தெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் பேசப்பட்டது. ரிலீசான வாரத்தில் பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்தது அதிரிந்தி.
இதன் மூலம் தெலுங்கிலும் ஒரு இடத்தை விஜய் பிடிக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது. விஜய்யின் அடுத்த படமும் தெலுங்கில் வெற்றிப் பெற்றால், ரஜினிக்குப் பிறகு அவர்தான் தென்னிந்திய ஸ்டார்!


Click it and Unblock the Notifications











