கவர்னராக கிரண் பேடி பதவியேற்பது ஓ.கே... அதுக்கு எதுக்கு, ரஜினி, விஜய்க்கு அழைப்பு?
பாண்டிச்சேரி: புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவி ஏற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள நடிகர்கள் ரஜினி, விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களை பாஜகவுக்கு இழுக்க இன்னும் கட்சி மேலிடம் துடிப்பதையே இது காட்டுவதாக தெரிகிறது.
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி அமைய உள்ளது. முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவரான கிரண்பேடி புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். (கிரண்பேடி இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி - பாஜகவின் டெல்லி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு படு தோல்வியைச் சந்தித்தவரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.)
இன்று மாலை 6.30 மணிக்கு கிரண்பேடி புதுச்சேரி ஆளுநராக பதவி ஏற்றுக் கொள்கிறார். இதனால் ஆளுநர் மாளிகையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் இருவருக்கும் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிரண் பேடி சார்பாக இந்த அழைப்பிதழை ரஜினி மற்றும் விஜய் இருவரின் வீடுகளிலும் நேரில் வந்து வழங்கியிருக்கின்றனர். எதற்காக இவர்களை அழைத்துள்ளனர் என்று தெரியவில்லை. ரஜினியை பாஜகவுக்கு இழுக்க ஒரு கட்டத்தில் தீவிரமாக முயன்று பார்த்தனர். தலைகீழாக நின்று பார்த்தனர் முடியவில்லை.
அதேபோல விஜய்யையும் இழுக்கப் பார்த்தனர். அதுவும் சரிப்பட்டு வரவில்லை.
இந்த நிலையில் பாஜக சார்பில் களம் கண்டு தோல்வியுற்றவரான கிரண் பேடி விருப்பத்தின் பேரில் இந்த இரண்டு பேரையும் அழைத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இவர்கள் போவார்களா என்றுதான் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications