துரை.செந்தில்குமாரின் 'கொடி'யை இறக்கிய தனுஷ்
சென்னை: துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த கொடி படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக, தனுஷின் தயாரிப்பில் 'கொடி'யை இயக்கி வருகிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

தனுஷ் அண்ணன், தம்பி என 2 வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் நடித்திருக்கின்றனர்.
முதன்முறையாக தனுஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஜனவரி மாதம் தொடங்கிய கொடி படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தனுஷ் தொடர்பான காட்சிகள் அனைத்தையும் இயக்குநர் முடித்து விட்டார். மேலும் மற்ற நடிக, நடிகையர் தொடர்பான படப்பிடிப்புகளையும், இன்னும் 10 நாட்களில் முடித்து விட அவர் திட்டமிட்டிருக்கிறார்.
இதுகுறித்து தனுஷ் "கொடி படப்பிடிப்பு முடிந்தது. இயக்குநர் துரை செந்தில்குமார் மற்றும் த்ரிஷா, அனுபமா ஆகியோருக்கு நன்றி" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனுஷின் விஐபி செண்டிமெண்ட் காரணமாக, கொடி ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொடி படப்பிடிப்பு தொடங்கும் முன் அனிருத்தும், படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் ஷாமிலியும் இப்படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











