சர்கார் படத்தை வெளியிட மாட்டோம்: திரையரங்கம் அதிரடி
தஞ்சாவூர்: ராணி பேரடைஸ் திரையரங்கம் சர்கார் படத்தை திரையிட மாட்டோம் என அறிவித்துள்ளது.
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. உலகெங்கிலும் சுமார் 3400 திரையரங்குகளில் வெளியாகிறது.

பொதுவாக மாஸ் ஹீரோக்களின் படம் என்றால் சினிமா டிக்கெட்டுக்கள் கொள்ளை நடப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு டிக்கெட் இரண்டாயிரம் மூன்றாயிரம் ரூபாய் என்றெல்லாம் கூட விற்கும் அவல நிலையை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
அரசு நடவடிக்கை எடுத்தாலும், டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் தீவிர ரசிகர்கள் வேறு வழியில்லாமல் அதிக தொகை கொடுத்து படத்தை பார்க்கின்றனர். தஞ்சாவூரில் உள்ள ராணி பேரடைஸ் திரையரங்கம் பிளாக் டிக்கெட் முறையை தவிர்ப்பதற்காக சர்கார் திரைப்படத்தை ரிலீஸ் செய்யவில்லை என அறிவித்துள்ளது.
முதல் இரண்டு நாட்களுக்கு சர்கார் டிக்கெட்டுகளை அதிக தொகைக்கு பிளாக்கில் விற்கச் சொல்லி விநியோகஸ்தர்கள் நிர்பந்தித்ததாகவும், ஆனால் நல்ல வழியில் மட்டுமே சினிமா காண்பிப்போம் என்ற உயரிய நோக்கோடு செயல்படுவதனால் விநியோகஸ்தர்களின் கூற்றை மறுத்து சர்கார் படத்தை திரையிடவில்லை என்றும், நடிகர் விஜய் செய்யும் உபதேசங்களை அவர் பின்பற்ற வேண்டும் எனவும் ராணி பேரடைஸ் திரையரங்கின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாக் டிக்கெட்டுக்கு எதிராக ராணி பேரடைஸ் திரையரங்கம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











