சிவாஜி எழுதியதாக சொல்லப்படும் உயில் பொய்யானது...கோர்ட்டில் மகள்கள் வாதம்
சென்னை : நடிகர் சிவாஜி கணேசன் 1999ம் ஆண்டு எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது என அவரது மகள்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், சொத்துக்களில் தங்களுக்கும் பங்கு இருப்பதாகவும், தங்களுக்கு உரிய பங்கை பிரித்து தர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட சிவாஜி குடும்ப சொத்து விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சொத்துக்களிலும் சமபங்கு உள்ளதாக கூறி ராம்குமார், தங்களிடமும் (சாந்தி, ராஜ்வி), பிரபுவிடமும் 2013ல் பொது அதிகார பத்திரத்தை எழுதிப் பெற்றதாக தெரிவித்தார்.
1999ல் எழுதப்பட்ட பதிவு செய்யப்படாத நடிகர் சிவாஜியின் உயில் 2021ல் தான் வெளிவந்தது எனவும், அதில் தங்களுக்கு சொத்தில் உரிமையில்லை என கூறப்பட்டுள்ளதாகவும், உயிலை மெய்ப்பித்து சான்று கோரிய வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், உயில் சட்டபடி மெய்ப்பித்து சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல என்றும் சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது. பாகப் பிரிவினை கோரி கடந்த 2021ம் ஆண்டு அனுப்பிய நோட்டீசுக்கு அளித்த பதிலில் தான், 1999ம் ஆண்டு சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளதாக முதல் முறையாக தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
சாந்தி தியேட்டரில் இருந்த தந்தை சிவாஜியின் 50 சதவீதம் பங்குகளும், தாய் கமலாவின் 50 சதவீதம் பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் கூறினார்.வழக்கில் சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பு வாதங்கள் முடிவடையாததால் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சிவாஜி குடும்ப சொத்து விவகாரம் தீவிரமடைந்து வருவதால் கோலிவுட்டே பரபரப்பாகி உள்ளது. வழக்கில் அடுத்து என்ன நடக்கும், கோர்ட் இந்த விவகாரத்தில் எந்த மாதிரி முடிவெடுக்கும்,சிவாஜி எழுதியதாக சொல்லப்படும் உயில் போலியானது என்றால் உண்மையான உயில் எங்குள்ளது, பிரபு மற்றம் ராம்குமார் மீது அவரது சகோதரிகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா என பல கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











