“நான் தான் ஹீரோ… விஜய், அஜித் படங்களை டைரக்ட் பண்றது..”: எஸ்ஜே சூர்யாவின் பதிலால் ரசிகர்கள் அப்செட்
சென்னை: எஸ்ஜே சூர்யா நடித்துள்ள வதந்தி வெப் சீரிஸ்ஸின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள வதந்தி வெப் சீரிஸ்ஸை ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், வதந்தி வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்ஜே சூர்யா, விஜய், அஜித் படங்களை இயக்குவது குறித்து தெரிவித்துள்ளார்.

எஸ்ஜே சூர்யாவின் வாலி, குஷி
1999ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான 'வாலி' திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் அஜித்தின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. அதற்கெல்லாம் காரணமாக அமைந்தது படத்தின் இயக்குநர் எஸ்ஜே சூர்யா. முதல் படமான வாலி மூலம் மாஸாக என்ட்ரி கொடுத்த எஸ்ஜே சூர்யா, அடுத்து விஜய் நடிப்பில் 'குஷி' படத்தை இயக்கினார். விஜய், ஜோதிகா நடித்த குஷி திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. எஸ்ஜே சூர்யாவின் முதல் இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், கோலிவுட்டின் முன்னணி இயக்குநர் என்ற அடையாளம் அவருக்கு கிடைத்தது.

வதந்தி வெப் சீரிஸ்
வாலி, குஷி படங்களைத் தொடர்ந்து அடுத்து இயக்கிய நியூ படத்தில் எஸ்ஜே சூர்யாவே ஹீரோவாக நடித்தார். அதன்பின்னர் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய எஸ்ஜே சூர்யா, இப்போது ஹீரோ, வில்லன் என நடிப்பில் வெரைட்டியாக கலக்கி வருகிறார். இந்நிலையில், ஆண்ட்ரூஸ் இயக்கிய 'வதந்தி' என்ற வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்துள்ளார் எஸ்ஜே சூர்யா. இது தான் எஸ்ஜே சூர்யாவுக்கு முதல் வெப் சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ள வதந்தி வெப் சீரிஸ், டிசம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

மீண்டும் விஜய், அஜித் படங்கள்?
எஸ்ஜே சூர்யாவுடன் நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வதந்தி வெப் சீரிஸ், க்ரைம் திரில்லரில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்ஜே சூர்யா, முதன்முறையாக வெப் சீரிஸில் நடித்துள்ளதால் தனது கனவு நனவாகியுள்ளதாகக் கூறினார். இந்த வெப் சீரிஸ் மூலம் உலகம் முழுவதும் எனது நடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அப்போது அவரிடம் மீண்டும் விஜய், அஜித் படங்கள் இயக்க வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர்.

இனி நான் தான் ஹீரோ
செய்தியாளர்களின் இந்த கேள்விக்கு பதிலளித்த எஸ்ஜே சூர்யா, "நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ஆசைப்படும் படங்களை இயக்கவே எனக்கு தேதிகள் இல்லை. இதில் விஜய், அஜித் நடிக்கும் படங்களை இயக்குவது கஷ்டம் தான். அப்படி ஒன்று நடக்க வேண்டுமானால் அதற்கு கடவுள் தான் அருள் புரிய வேண்டும். அப்படி நடந்தால் கண்டிப்பாக பார்க்கலாம்" என சிரித்துக்கொண்டே கூறினார். வாலி, குஷி படங்களுக்குப் பின்னர் எஸ்ஜே சூர்யா இயக்கிய நியூ, அன்பே ஆரூயிரே, இசை ஆகிய படங்களில் அவரே ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உருவாகுமா கில்லர்?
சில தினங்களுக்கு முன்னர் எஸ்ஜே சூர்யா மீண்டும் படம் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. அந்தப் படத்துக்கு கில்லர் என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அதுகுறித்து அபிசியல் அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. அந்தப் படத்திலும் எஸ்ஜே சூர்யா தான் ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஆர்சி 15, விஜய்யுடன் வாரிசு படங்களில் நடித்து வருகிறார் எஸ்ஜே சூர்யா. அதன் பின்னரே கில்லர் படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











