Veetla Vishesham Review: 50 வயதில் அம்மாவாகும் ஊர்வசி.. வீட்ல விசேஷம் விமர்சனம் இதோ!
நடிகர்கள்: ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி
இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
இயக்கம்: ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன்
ரேட்டிங்: 3/5.
சென்னை: போனி கபூர் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே சரவணன் இயக்கத்தில் வீட்ல விசேஷம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
50 வயதில் ஒரு பெண் கர்ப்பமானால் அவளை கர்ப்பமாக்கிய ஆணை வீரனாகவும், அந்த பெண்ணை கேவலமாகவும் பார்க்கும் சமூகத்தின் எண்ணத்திற்கு எதிரான சவுக்கடி தான் இந்த படம்.
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம் என்றாலும், சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ப்ரோ டாடி படத்தின் கதையம்சமும் இதே தான். மேலும், இதே கதையம்சத்தில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படம் ஒன்றும் வெளியாகி இருப்பதால், இந்த படம் அதிலிருந்து மாறுபடுகிறதா? இல்லை ரசிகர்களை ஈர்க்க ஆர்ஜே பாலாஜி என்ன செய்துள்ளார் என்பதை இங்கே காண்போம்..
Recommended Video
இதுதான் கதை
திருமணமாகும் வயதில் மகன்கள் உள்ள நிலையில், அப்பா சத்யராஜின் அதீத கொஞ்சல் காரணமாக அம்மா ஊர்வசி கர்ப்பமாகிறார். 50 வயதில் கர்ப்பமான விஷயத்தை மகன்களிடம் எப்படி சொல்வது, சமூகம் எப்படி பார்க்கும், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன பேசுவார்கள் என ஏகப்பட்ட விஷயங்களை காமெடி மற்றும் கருத்து கலந்து அணுகியுள்ள படம் தான் வீட்ல விசேஷம்.
சத்யராஜ் - ஊர்வசி
சத்யராஜ் மற்றும் ஊர்வசி அந்த வயோதிக தம்பதிகளாக இந்த படத்தில் நடித்துள்ளனர். கர்ப்பமானது தெரிந்ததும் மகன்களிடம் சொல்லுங்கள் என கோர்த்து விட்டு நகர்ந்து செல்லும் ஊர்வசியின் நடிப்பும், மகன்களிடம் சொல்லத் தயங்கி அந்த விஷயத்தை ஓப்பன் பண்ண பிறகு மகன்கள் கொடுக்கும் ரியாக்ஷன்களும் ரசிக்க வைக்கிறது. எந்தவொரு விரசமும் இல்லாமல் இப்படியொரு கதையை அழகாக டீல் செய்த விதத்திலேயே படம் ரசிக்க வைக்கிறது.
பெண்மையை போற்றும் படம்
படையப்பா, மன்னன் படங்களில் பெண்களை தப்பா காட்டி இருக்காங்க என பேசி சர்ச்சையில் சிக்கி இருந்தார் ஆர்ஜே பாலாஜி. ஆனால், இந்த படத்தில் எந்தளவுக்கு பெண்களை போற்றி இருக்கிறார் என்பதன் வெளிப்பாடு தான் அது என புரிந்து கொள்ள முடிகிறது. வயதான காலத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு காரணம் என்றால், வீரனாக கெத்தாக தலைநிமிர்ந்து நடப்பதும், அதே நேரத்தில் ஒரு பெண்ணை மட்டும் சமூகம் கேவலமாக பார்க்கும் மன நோயை போக்கவே இப்படியொரு கதை சொல்ல வேண்டி இருக்கிறது. நோ மீன்ஸ் நோ கதையை தமிழ் சமூகத்துக்கு சொல்ல விரும்பிய போனி கபூரே இந்த கருத்தையும் சொல்ல முற்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. சமீபத்தில் சாதிய பிரச்சனைகளை பற்றிய படமாக நெஞ்சுக்கு நீதி படமும் வெளியாகி இருந்தது.
பலம்
சத்யராஜ், ஊர்வசி மற்றும் சத்யராஜின் அம்மாவாக நடித்துள்ள கே.பி.ஏ.சி. லலிதா இந்த மூன்று கதாபாத்திரங்கள் தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. ஆர்ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் இடையே வரும் டைமிங் காமெடி மற்றும் படம் முழுக்க வரும் சின்ன சின்ன அழகான காட்சிகள் ரசிக்க வைக்கிறது. மாடர்ன் என்பது போடுற ஜீனில் இல்லை என்றும் மனதளவில் மாறினால் மட்டுமே அது மாடர்ன் சொசைட்டி என ஆர்ஜே பாலாஜிக்கு அழகாக புரிய வைக்கும் அபர்ணா பாலமுரளியின் காட்சி கதைக்கு வலு சேர்த்துள்ளது.
பலவீனம்
ஏற்கனவே இதுபோன்ற கதைகளை பார்த்து விட்டோம் என்பது ஒரு பெரிய குறை என்றாலும், மேக்கிங் ரீதியாக படத்தை வெற்றி பாதைக்கு ஆர்ஜே பாலாஜி திருப்பி இருக்கிறாரா என்று பார்த்தால், முதல் பாதியில் அந்த வேலையை செய்த அவர், இரண்டாம் பாதியில் சினிமாவா? சீரியலா? என்கிற கன்ஃபியூஷனுக்குள் வந்தது தான் படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாகவே மாறி விட்டது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. சொல்ல வந்த கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் தியேட்டரில் தினமும் விசேஷமாக மாறியிருக்கும். மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் வெளியிட்ட நிலையில், தியேட்டருக்கு வந்துள்ள வீட்ல விசேஷத்தின் பாக்ஸ் ஆபிஸ் நெஞ்சுக்கு நீதி போல ஆகிவிடாமல் இருந்தால் சரி.


Click it and Unblock the Notifications











