ஆந்திரா, கேரளாவிலும் வசூலைக் குவித்தது விஜய்யின் தெறி
சென்னை: விஜய் நடிப்பில் வெளியான தெறி முதல் 2 நாட்களில் 27.97 கோடிகளை தென்னிந்தியாவில் வசூலித்துள்ளது.
விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 14 ம் தேதி வெளியான படம் தெறி.
அட்லீயின் 2 வது படம் ஜி.வி.பிரகாஷின் 50 வது படம் என்ற பெருமைகளுடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

தமிழ்நாடு
விஜய் நடிப்பில் வெளியான தெறி முதல் 2 நாட்களில் 27.97 கோடிகளை தென்னிந்தியாவில் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ 20.22 கோடிகளை இப்படம் வசூல் செய்திருக்கிறது.

கேரளா
படத்தின் முதல் பாதி கேரளாவில் நகர்வது, விஜய் மலையாளம் பேசி நடித்திருப்பது ஆகியவை கேரளாவில் இப்படத்திற்கு பெரும்பலத்தைக் கொடுத்திருக்கின்றன. இதனால் கேரளாவில் மட்டும் இப்படம் ரூ 3.75 கோடிகளை குவித்திருக்கிறது.

கர்நாடகா
இதேபோல கர்நாடகா மாநிலத்தில் ரூ 2.70 கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வேறு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் விஜய் படத்திற்கு 2 மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா
ஒருசில பிரச்சினைகளால் இப்படம் ஒருநாள் தாமதமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியானது. இதில் ரூ 85 லட்சங்களை ஆந்திராவிலும், ரூ 45 லட்சங்களை தெலுங்கானாவிழும் இப்படம் வசூல் செய்துள்ளது.
மொத்தத்தில் 27.97 கோடிகளை தென்னிந்தியாவில் வசூலித்து தெறி புதிய சாதனை படைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











