TVK Maanadu: அச்சச்சோ.. ஒரு உயிர் போச்சு.. சரிந்த 100 அடி கம்பம்.. விஜய்க்கு இப்பவே அடிமேல் அடி விழுதே
மதுரை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் ஏற்பாட்டுப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டு ஏற்பாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றாலும், விஜய்க்கு அடி மேல் அடி விழுந்து கொண்டே உள்ளது.
மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று காலை முதலே மாநாடு தொடர்பான துயரச் செய்திகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. இது தவெகவினரையும் பொதுமக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. திருவில்லிப்புத்தூரில் மதுரை மாநாடு தொடர்பான பேனர் கட்டிக் கொண்டு இருந்த, தவெகவைச் சேர்ந்த, 19 வயது இளைஞர் காளீஸ்வரன் உயிரிழந்தார்.
இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் தவெக மாநாட்டு திடலில் விஜய் கொடியேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 100 அடி கொடிக்கம்பம், நிறுவப்பட்ட சில நிமிடங்களிலேயே சரிந்து விழுந்து பெரிய விபத்தாக மாறியுள்ளது. 100 அடி கம்பம் சரிந்து விழும் என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தொடங்கி, தவெகவினர் என யாருமே நினைக்கவில்லை. இப்படி இருக்கும்போது, கொடியை மாநாட்டு திடலில் நிறுவிய சில நிமிடங்களுக்குள்ளாகவே கம்பம் அப்படியே சரிந்து விழுந்தது.
விபத்து: கம்பம் சரிவதை அங்கு கூடியிருந்த தவெகவினர் ஏற்கனவே பார்த்து விட்டதால், அனைவரும் கம்பம் விழுந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு ஓடினார்கள். இதனால் மக்கள் மீது கம்பம் விழவில்லை. அதேபோல், கம்பம் அங்கிருந்த பெரிய காரின் மீது விழுந்ததில், கார் முற்றிலும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக காருக்குள்ளும் யாரும் இல்லை. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
அடி மேல் அடி: ஏற்கனவே மாநாட்டிற்கு ஒன்றரை லட்சம் சேர்கள் தருவதாக ஒத்துக் கொண்ட ஒப்பந்ததாரர்கள், கடைசி நேரத்தில் தர மறுத்துவிட்டனர். இப்படி இருக்கும்போது, தற்போது மாநாட்டிற்கு கேரளாவில் இருந்து சேர்கள் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், விஜய்க்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே உள்ளது என இணையவாசிகள் பேசிக் கொள்கிறார்கள்.

நெட்டிசன்கள் கேள்வி: அதேநேரத்தில், 100 அடியில் பிரமாண்டமான கொடிக்கம்பத்தை நிறுவி, அதன் மூலம் விஜய் என்ன சொல்ல வருகிறார்? அதனால் யாருக்கு என்ன பயன்? சரிந்து விழுந்த கொடிக்கம்பத்தால் யாராவது காயம் பட்டிருந்தால், அல்லது துரதிஷ்டவசமாக உயிரே போயிருந்தாலும் என்ன ஆவது? விக்கிரவாண்டி மாநாட்டிலும் இது போன்ற பிரம்மாண்டமான கொடிக் கம்பத்தை தவெக நிறுவியுள்ளது. அதற்காக அந்த நில உரிமையாளர்களிடம் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











