2015ல் கமல் ஆதிக்கம்! கால் நூற்றாண்டுக்கு பிறகு கமலின் 3 படங்கள் ஒரே வருடத்தில் ரிலீஸ்
சென்னை: சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 3 படங்கள் ஒரே ஆண்டில் ரிலீசாக உள்ளன. அந்த வகையில் அடுத்த ஆண்டு கமல் ரசிகர்களுக்கும், கலை ரசிகர்களுக்கும் தித்திக்கும் ஆண்டாக அமையப்போகிறது.
கமல்ஹாசன் இந்தாண்டு முழுவதுமே மூன்று படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருந்தார். உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 ஆகிய மூன்று படங்களுக்காக ஆண்டு முழுவதையுமே அவர் செலவிட்டார். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும், உத்தமவில்லன் இந்த மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் நிலுவையிலுள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தம வில்லன் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. அதையடுத்து பாபநாசமும், மூன்றாவதாக விஸ்வரூபம்-2 ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தப்போகின்றது.
ஓராண்டில், கமலின் மூன்று படங்கள் வெளியாகி சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாவது இருக்கும் என்கிறார், திரைப்பட எழுத்தாளர் தனஞ்சயன் கோவிந்த். அந்த வகையில் இரு கால் நூற்றாண்டு சாதனையாகும்.
உத்தமவில்லன் படத்துக்கான சவுண்ட் மிக்சிங் பணிகளுக்காக, கமல்ஹாசன் விரைவிலேயே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல உள்ளார். அதே ஸ்டூடியோவில் விஸ்வரூபம்-2 படத்தின் சவுண்ட் மிக்சிங்கையும் முடித்துவிடப்போகிறார் கமல். மூன்று படங்களுக்குமான சூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், பிந்தைய பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











