லிங்கா உண்மையிலேயே நஷ்டமா..? சரி பார்க்க பொறுப்பாளர் நியமனம்!
லிங்கா படம் நஷ்டம் என்று கூறும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கணக்குகளைச் சரிபார்க்க ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளார் ரஜினிகாந்த் என்று தகவல் கிடைத்துள்ளது.
கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்த லிங்கா கடந்த டிசம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் 3 ஆயிரம் ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது.

தமிழ் நாட்டில் 750 தியேட்டர்களில் திரையிட்டனர். ரஜினி 4 வருடங்களுக்குப் பிறகு நடித்து நேரடி படமாக வந்ததால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள்.
முதல் மூன்று நாட்கள் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான திரையரங்குகளில் சராசரியாக ரூ 250 முதல் 300 வரை டிக்கெட் விற்கப்பட்டது. முதல் நாள் ஆயிரம் ரூபாய் வரையிலும் வசூலித்தனர்.
ஆனால் படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை மூன்றாவது நாளிலிருந்தே பிரச்சாரத்தை ஆரம்பித்தனர் சிலர். குறிப்பாக படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் ஒருவர் படம் செத்துவிட்டது என்றெல்லாம் கூறினார்.
முதல் மூன்று நாளில் உண்மையாக வசூலான தொகையை கணக்கிலேயே இவர்கள் காட்டவில்லை. குறிப்பாக முதல் நாளில் ரூ 10, 30, 50 என டிக்கெட் வசூலிக்கப்பட்டதாக புற நகர்ப் பகுதி அரங்குகளில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. அரங்கம் நிரம்பி வழிந்த போதிலும், 100 முதல் 200 பேர் வரைதான் படம் பார்த்ததாக டிசிஆர் எனப்படும் வசூல் பதிவேட்டில் கணக்கு காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா வசூல் விவரங்கள் ஒருபோதும் உண்மையை வெளிப்படுத்தியதில்லை. எனவே இதில் பெரும் பாதிப்பு தயாரிப்பாளர்களுக்கே ஏற்படுகிறது.
லிங்காவிலும் இந்தப் பிரச்சினைதான் எதிரொலித்தது. உண்மையான வசூல் விவரத்தை வெளியிட யாரும் தயாராக இல்லை. பொய்க் கணக்கு காட்டி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்தப் பிரச்சினையை தொடர்ந்து முன்னிறுத்தி உண்ணாவிரதம் போன்ற முயற்சிகளில் இறங்கினர் சில விநியோகஸ்தர்கள்.
இப்பிரச்னையில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் லிங்கா படத்தால் உண்மையிலேயே நஷ்டமா என்று கணக்குப் பார்க்க ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம்.
கோவை ஏரியாவின் வினியோகஸ்தரான இவர்தான் முன்பு பாபா, குசேலன் பிரச்சினைகளின் போது ரஜினிக்கு உதவியாக இருந்தார்.
உண்மையாகவே அதிக நஷ்டம் அடைந்திருப்பவர்கள் யார் என்று பார்த்து அவர்களுக்கு ஓரளவு தொகையை திரும்பத் தர முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஏதுவம் தெரிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











