56 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜாக்கி சான்
லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிக்க வந்து 56 ஆண்டுகள் கழித்து ஜாக்கி சானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
8வது கவர்னர்ஸ் விருது விழா அதாவது கவுரவ ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஜாக்கி சான், எடிட்டர் ஆன் வி கோட்ஸ், காஸ்டிங் டைரக்டர் லின் ஸ்டால்மாஸ்டர் மற்றும் ஆவணப்பட இயக்குனர் பிரெடரிக் வைஸ்மேன் ஆகியோருக்கு அவர்களின் கலை சேவையை பாராட்டி கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

23 ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டலோனின் வீட்டில் ஆஸ்கர் விருதை பார்த்த ஜாக்கி சான் நானும் ஒரு நாள் வாங்குவேன் என நினைத்துள்ளார். ஆனால் ஆஸ்கருக்காக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.
விருதை பெற்றுக் கொண்ட ஜாக்கி சான் கூறுகையில்,
திரைத்துறைக்கு வந்து 56 ஆண்டுகள் கழித்து, 200 படங்களுக்கு மேல் நடித்து, பல எலும்புகளை உடைத்துக் கொண்ட பிறகு ஒரு வழியாக ஆஸ்கர் கிடைத்துள்ளது. பல ஹாலிவுட் படங்களில் நடித்தும் உனக்கு ஏன் இந்த விருது கிடைக்கவில்லை என ஆஸ்கர் விருது விழாவை பார்க்கும்போது எல்லாம் என் தந்தை கேட்டார்.
எனக்கு இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன், ஜன்னல் வழியாக குதிப்பேன், சண்டை போடுவேன், என் எலும்புகளை உடைத்துக் கொள்வேன் என்றார்.


Click it and Unblock the Notifications











