National Awards 2022: சிறந்த பாடகி விருது பெற்ற நஞ்சம்மா… அரங்கமே எழுந்து நின்று கரவொலி
டெல்லி: மலையாளத்தில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு 4 பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
சச்சி இயக்கத்தில் 2020ம் ஆண்டு வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் பிருத்விராஜ், பிஜூ மேனன் இருவரும் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் 'கிழக்காத்த சந்தன மேரம் வெகுவாகப் பூத்துருக்கு பாடலைப் பாடிய நஞ்சியம்மா சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.

அய்யப்பனும் கோஷியும் 4 விருதுகள்
மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படம், 4 பிரிவுகளில் தேசிய விருது வென்று அசத்தியுள்ளது. மறைந்த இயக்குநர் சச்சியின் இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜூ மேனன் இருவரும் லீடிங் ரோலில் நடித்திருந்தனர். ஈகோவினால் ஏற்படும் சிறிய மோதல், எப்படி மதம் பிடித்த யானையாக மாறி மனிதத்தை துவம்சம் செய்கிறது என்பதே இப்படத்தின் கதை. மனிதனுக்குள் திமிறிக் கொண்டிருக்கும் அறமற்ற வன்மத்தின் வீரியம் எப்படி இருக்கும் என திரையில் காட்சிகளாக விவரித்தது இத்திரைப்படம்.

இயக்குநர் சச்சி
'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் இயக்குநர் சச்சி, பல படங்களில் திரைக்கதை எழுதியுள்ளதோடு, பிருத்விராஜ் நடித்த 'அனார்கலி' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதுவே அவருக்கு முதல் படமாகவும், 'அய்யப்பனும் கோஷியும்' இரண்டாவது படமாகவும் அமைந்தது. இந்தப் படத்தை இயக்குவதற்கு முன் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'டிரைவிங் லைசென்ஸ்' படத்திற்கு கதை எழுதியிருந்தார் சச்சி. அந்தப் படத்தின் கதையும் இருவருக்கு இடையே நடக்கும் ஈகோ யுத்தம் தான். அதே ஈகோவை பின்னணியாகக் கொண்டே 'அய்யப்பனும் கோஷியும்' படத்தையும் வேறு வடிவத்தில் இயக்கி, ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார். இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் விருதை பெற அவர் உயிரோடு இல்லாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நஞ்சியம்மாவின் கானம்
'கிழக்காத்த சந்தன மேரம் வெகுவாகப் பூத்துருக்கு' என்ற மலைகளின் அமுத குரலாக ஒலித்த இந்தப் பாடல் தான், 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் உயிர்நாடியாக இருந்தது. பழங்குடியினத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகியான நஞ்சியம்மா பாடிய இப்பாடல், பலரையும் வசியம் செய்து வாரியணைத்துக் கொண்டது. பிருத்விராஜ்ஜையும் பிஜூ மேனனையும் யாரென்றே தெரியாத ஒருவர், அவர்கள் நடித்த படத்தில் பாடலையும் பாடி தேசிய விருதை வென்றுள்ளார். இந்தப் பாடலுக்காக சிறந்த பாடகிக்கான விருதை இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் நஞ்சியம்மா பெற்றுக் கொண்டார்.

அரங்கமே எழுந்து நின்று கரவொலி
இந்நிலையில், சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற நஞ்சியம்மா மேடையேறியதும், விழா அரங்கத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். எங்கோ ஒரு மலை பிரதேசத்தில் பொழுதுப் போக்குக்காக பாடிக்கொண்டிருந்த நஞ்சியம்மா தேசிய விருதை பெற்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. கன்களில் மகிழ்ச்சியும் ஆனந்த கண்ணீரும் ததும்ப நஞ்சியம்மா தேசிய விருதைப் பெற்றுக்கொண்டது காவியமாக இருந்தது. முன்னதாக விழா நடக்கும் முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நஞ்சியம்மா, தான் 13 வயதில் இருந்து பாடி வருவதாகவும் இந்த விருது கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பரவசத்துடனும் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











