பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது… மத்திய அரசு அறிவிப்பு !
டெல்லி : நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதில் பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் பத்மவிபூஷன் 4 பேருக்கும், பத்மபூஷன் 17 பேருக்கும், பத்மஸ்ரீ 107 பேருக்கும் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் உயரிய விருது
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள் சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.

சௌகார் ஜானகி
திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து சாதனை படைத்துள்ளார் சௌகார் ஜானகி. 1940களின் இறுதியில் அறிமுகமாகி ஐம்பதுகளில் பல படங்களில் நடித்தாலும் அறுபதுகளின் துவக்கத்திலேயே சௌகார் ஜானகி வரிசையாக பலத்திரைப்படங்களில் நடித்து தனது தடத்தை பதித்தார்.

பார்த்த ஞாபகம் இல்லையோ…
குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் கனகச்சிதமாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார் சௌகார் ஜானகி. அதே போல புதிய பறவை திரைப்படத்தில் அடங்காத மனைவியாக நடித்திருப்பார். பாதிப்படத்திற்கு பின் ரீ என்ட்ரி கொடுப்பார், படத்தில் மைக்கை பிடித்துக்கொண்டு ""பார்த்த ஞாபகம் இல்லையோ... பருவ நாடகம் தொல்லையோ".... என்ற பாடலுக்கு அவர் மேடையில் பாடுவதும் சிவாஜி அதிர்ச்சி அடைந்து பார்ப்பதும் அந்தக்காலத்தில் மிகவும் வரவேற்கப்பட்ட காட்சி. இந்த பாடல் இன்று வரை பலருக்கு பிடித்தமான பாடலாகவே உள்ளது.

சந்தானத்துடன்
அடுத்த தலைமுறை நடிகர்களான கமல் ரஜினி பயணத்திலும் சௌகார் தனி முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை.சின்ன கேரக்டரில் வந்தாலும் அதனை மறக்க முடியாத அளவுக்குச் செய்து விடுவதில் சௌகார் ஜானகி படு கில்லாடி. சௌகார் ஜானகி கடைசியாக சத்தானத்துடன் பிஸ்கோத்து திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பத்ம ஸ்ரீ விருது
இந்நிலையில் ,மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்து அவரை கௌரவப்படுத்தி உள்ளது. அவருக்கு பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











