பாலிவுட் நடிகர் - இயக்குநர் மனோஜ் குமாருக்கு பால்கே விருது
டெல்லி: திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பழம்பெரும் இந்தி நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளரான மனோஜ் குமார் (79) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியத் திரையுலகின் தந்தை என்று போற்றப்படுபவர், தாதா சாகேப் பால்கே. அவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறை சாதனையாளர்களுக்கு பால்கே பெயரிலான விருது இந்திய அரசால் 1969 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2015-ம் வருடத்துக்கான தாதாசாஹிப் பால்கே விருது, மனோஜ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர், 1992-ல் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பத்மஸ்ரீ விருதையும் மனோஜ் குமார் ஏற்கெனவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசபக்திப் படங்களை இயக்குவதில் மனோஜ்குமார் தனி முத்திரைப் பதித்து வந்தார்.
"வோ கோன் தி', "உப்கார்', "நீல் கமல்' உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இயக்குநராக ரோடி கப்டா அவுர் மகான், சந்யாசி, துஸ் நம்பரி, கிராந்தி போன்ற சில்வர் ஜூப்லி படங்களைக் கொடுத்தவர் மனோஜ்குமார். இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மெய்டன் இ ஜங். 1995-ல் வெளியானது. கடைசியாக தன் மகனை வைத்து ஜெய் ஹிந்த் என்ற படத்தை இயக்கினார்.


Click it and Unblock the Notifications











