திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
டெல்லி: தேசிய திரைப்பட விருதுகளை, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் நேற்று வழங்கினார். தமிழக நடிகர் பாபி சிம்ஹா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் தேசிய விருதுகளை குடியரசுத்தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்
சிறந்த திரைப்படங்கள் மற்றும் சினிமா கலைஞர்களுக்கான, 62 வது தேசிய விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. டெல்லியில் நடந்த விழாவில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

கன்னட நடிகர் விஜய் – கங்கனா ரணவத்
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, கன்னட நடிகர் விஜய் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பெற்றுக்கொண்டனர்

நா.முத்துக்குமார்
சிறந்த பாடலாசிரியருக்கான விருது, தமிழகத்தை சேர்ந்த நா.முத்துகுமாருக்கு வழங்கப்பட்டது.

உத்ரா உண்ணிகிருஷ்ணன்
சிறந்த பாடகிக்கான தேசிய விருதை, பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள், உத்ரா உன்னிகிருஷ்ணன் பெற்றார். விழாவின் போது, 'சைவம்' படத்தில் அவர் பாடிய பாடலை மேடையில் பாடினார்.

பாபி சிம்ஹா
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை, 'ஜிகர்தண்டா' தமிழ் திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா பெற்றார். சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது, 'ஜிகர்தண்டா' படத்திற்காக விவேக் ஹர்ஷனுக்கு வழங்கப்பட்டது.

தனுஷ் பெற்ற விருது
சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான விருது, 'காக்கா முட்டை'க்கு வழங்கப்பட்டது. இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் விருதைப் பெற்றுக்கொண்டார். இந்த படத்தில் நடித்த, விக்னேஷ் மற்றும் ரமேஷ், சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருது பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை, 'குற்றம் கடிதல்' தட்டிச் சென்றது.

யுடிவி தனஞ்செயன்
இதுதவிர, ப்ரைட் ஆப் தமிழ் சினிமா என்ற புத்தகத்தை எழுதிய, யுடிவி தனஞ்ஜயனுக்கு சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.

தாதா சாகேப் பால்கே விருது
பழம்பெரும் நடிகர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருந்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் விழாவில் பங்கேற்க முடியவில்லை. எனவே மும்பையில் தனியாக விழா ஏற்பாடு செய்து விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











