என்னது புஷ்பா படத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது கொடுத்துருக்காங்களா... சூப்பர்தான்!
ஐதராபாத் : அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் புஷ்பா.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுகுறித்து படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது. இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

மிரட்டலான நடிப்பு
மரக்கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அல்லு அர்ஜுன். படத்தில் இவரது மிரட்டலான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்திய அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்துள்ளது.

சிறப்பான டயலாக்குகள்
இந்தப் படத்திற்கு முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுரமுலு படத்தில் ஸ்டைலிஷ்ஷான அல்லு அர்ஜுனை பார்க்க முடிந்தது. அந்த கேரக்டருக்கு அப்படியே நேரெதிரான கேரக்டரில் புஷ்பா படத்தில் அவரை பார்க்க முடிந்தது. புஷ்பான்னா ப்ளவருன்னு நெனைச்சியா... பயருடா என்பது போன்ற டயலாக்குகள் திரையரங்குகளை அதிர வைத்தன.

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்
படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. தமிழிலும் இந்தப் பாடல்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்துள்ளது. ஊ சொல்றியா, சாமி, ஸ்ரீவள்ளி உள்ளிட்ட பாடல்களுக்கு பல பிரபலங்கள் நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சிறப்பான வசூல்
வெளியான மொழிகள் அனைத்திலும் சிறப்பான வசூலை இந்தப் படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் வெளிவர உள்ள நிலையில், அடுத்த மாதத்தில் அந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அல்லு அர்ஜுனை பான் இந்தியா நாயகனாக மாற்றியுள்ளது. இனி வரும் அவரது படங்கள் அனைத்தும் பான் இந்தியா படமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

தாதாசாகேப் பால்கே விருது
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பான பெயரை பெற்றுள்ள நிலையில், தற்போது அந்த மகுடத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தற்போது இந்தப் படம் சிறந்த படத்திற்கான தாதாசாகேப் பால்கே 2022 விருதை தட்டிச் சென்றுள்ளது. இதுகுறித்து தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கடின உழைப்பு பலனளித்துள்ளதாக பாராட்டு
இந்த விருதை பெற்றுள்ளதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ள தாதாசாகேப் பால்கே விருது குழுவினர், படக்குழுவின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி பலனளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே படம் கொடுத்துள்ள வசூல்மழையால் மகிழ்ச்சியில் உள்ள படக்குழுவினர், இந்த விருது கிடைத்துள்ளது குறித்து கூடுதல் சந்தோஷத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











