கமலின் நாயகன்!

மறைந்த ஓவியர் கே.எம். ஆதிமூலத்தின் நினைவாக புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், எழுத்தாளர் மாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஆதிமூலத்திற்கு கமல் முதல் அனைவரும் புகழாரம் சூட்டினர். கமல்ஹாசன் பேசுகையில், இந்த விழா ஆதிமூலம் உயிருடன் இருந்தபோதே நடந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் நடக்கிறது. இருந்தாலும் இது சிறந்த விழா, ஆதிமூலத்திற்கு நல்லஞ்சலி செலுத்தும் விழா.
ஆதிமூலம் நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். தனது அனைத்துப் படைப்பிலும் அதை வெளிப்படுத்தியிருப்பார். எனக்கும், அவருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது.
ஆதிமூலத்தின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். அதேபோல ஜெயகாந்தனுக்கும் நான் பரம விசிறி. எனது கதாநாயகன் அவர்தான். இப்போது அல்ல, எப்போதுமே அவர்தான் எனது மனம் கவர்ந்த நாயகன்.
ஆதிமூலத்தின் திடீர் இழப்பு, இலக்கிய உலகத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என்றார் கமல்.
நூலினை கமல்ஹாசன் வெளியிட அதை ஜெயகாந்தன் பெற்றுக் கொண்டார்.
இந்த நூலில், ஆதிமூலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தமிழ் இலக்கியம் மற்றும் திரையுலகைச் சேர்ந்த 100 பேர் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை பத்திரிக்கையாளர் மனா தொகுத்துள்ளார். உயிர்எழுத்து பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.
நாசர், சா.கந்தசாமி, டிராட்ஸ்கி மருது, கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, ஓவியர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











