பாதுகாப்பின்மை, பயம்.. இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என மனைவி சொன்னார்! - ஆமிர் கான் அதிர்ச்சி
மும்பை: இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதால், வேறு நாட்டுக்குப் போய்விடலாம் என தன் மனைவி சொன்னதாக நடிகர் ஆமிர்கான் கூறியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நாட்டில் மோடி தலைமையிலான பாஜக அரசு வந்த பிறகு சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதாகக் கூறி அறிவு ஜீவிகள் பலரும் தங்களுக்கு அரசு தந்த விருதுகளைத் திருப்பித் தந்து வருகின்றனர். சில திரையுலகப் பிரபலங்களும் இப்படிச் செய்து வருகின்றனர். விருதுகளைத் திருப்பித் தருவதை பலமாக ஆதரிக்கிறார் ஆமிர்கான்.
இந்த நிலையில், இதன் அடுத்த கட்டமாக நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் குறித்து பேசியுள்ளார் ஆமிர்கான்.

அபாய மணி
சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஆமீர்கான், நாட்டில் சகிப்புத் தன்மை இல்லாதது குறித்து கூறுகையில், "இந்த நாட்டின் ஒரு குடிமகனாக, ஒரு தனி மனிதனாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நாளிதழ்களில் படிக்கிறோம். செய்திகளில் பார்க்கிறோம். எனக்குள் ஒரு அபாய மணி ஒலிக்கிறது. சகிப்பின்மைக்கான பல சம்பவங்களைப் பார்த்துவிட்டேன் என்பதை மறுப்பதற்கில்லை.

பாதுகாப்பின்மை - பயம்
கடந்த ஆறு ஏழு மாதங்களாகவே நாட்டில் ஒரு வித பாதுகாப்பின்மை, அச்சம் நிலவுவதாக உணர்கிறேன்.

நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா?
ஒரு முறை என் மனைவி கிரணுடன் பேசிக் கொண்டிருந்தபோது, "நாம் இந்தியாவை விட்டுப் போய்விடலாமா?" என்று கேட்டாள். மிகப் பெரிய துயரம் இது. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து என் மனைவி பயப்படுகிறாள். சுற்றி நிலவும் சூழல் கண்டு அச்சம் கொள்கிறாள். ஒவ்வொரு நாளும் செய்தித் தாளைத் திறக்கவே பயப்படுகிறாள் என் மனைவி.

கூனிக் குறுகி
இந்த உணர்வு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. அமைதியின்மை தொடர்கிறது. இது ஏன் என யோசித்துப் பார்த்தால், கூனிக் குறுகி நிற்பீர்கள். எனக்குள்ளும் அப்படி ஒரு உணர்வு.
எந்த சமூகத்திலும் பாதுகாப்பும் நீதியும் மிக அவசியம்.

நடவடிக்கை எடுத்திருந்தால்...
தனி நபர்கள் சிலர் சட்டத்தைக் கையிலெடுக்கும்போது, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்கள் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள். அப்படி எடுத்திருந்தால் பாதுகாப்பு உணர்வு இருந்திருக்கும்.

விருதை திருப்பித் தருவது சரிதான்
நாட்டில் சகிப்புத் தன்மை இல்லாததைக் கண்டிக்கும் வகையில் எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், திரையுலகினர் தங்களுக்கு அரசு கொடுத்த விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது சரியான ஒன்றே. படைப்பாளிகள் தங்கள் கோபத்தைக் காட்ட சிறந்த வழி அதுதான்.

எந்த ஆட்சியாக இருந்தாலும்...
சகிப்புத் தன்மைக்கு எதிரான அகிம்சை முறையிலான மக்கள் போராட்டங்களை நான் ஆதரிப்பேன்.
அது பிஜேபி ஆட்சியாக இருந்தாலும் சரி, 1984-ல் அரங்கேறிய வன்முறைகளுக்கு காரணமானவர்களாக இருந்தாலும் சரி.. தவறு தவறுதான்," என்றார்.


Click it and Unblock the Notifications











