நடிகர் நாசர் பற்றிய சுவாரஸ்யங்கள்...அட இதெல்லாம் தெரியாம போச்சே
சென்னை : நடிகர் நாசரை தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் மற்றொரு தசாவதானி என்றே சொல்லலாம். அவர் இன்று தனது 64 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்காக ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் சங்க நிர்வாகி, அரசியல்வாதி என பல திறமைகளை தனக்குள் வைத்துள்ளார் நாசர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார் நாசர். சினிமாவை தாண்டி அரசியல், நடிகர் சங்க தலைவர் பொறுப்பு என்றும் கலக்கி வருகிறார் நாசர்.

பல அவதாரங்கள் எடுத்த நாசர்
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் அறிமுக உருவாக்கங்களில் நாசரும் ஒருவர். கல்யாண அகதிகள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நாசர். ஆரம்பத்தில் சப்போர்டிங் ரோல்களில் நடித்து வந்த நாசர், பிறகு எஸ்.பி.முத்துராமன் படங்களில் வில்லன் ரோலில் நடிக்க துவங்கினார். ரஜினி நடித்த வேலைக்காரன் படம் தான் இவர் முதன் முதலில் வில்லனாக நடித்த படம். யுகி சேதுவின் கவிதை பாட நேரமில்லை படத்தின் மூலம் ஹீரோ ஆன நாசர், அவதாரம் படத்தின் மூலம் டைரக்டராக புதிய அவதாரம் எடுத்தார்.

இதெல்லாம் செய்திருக்கிறாரா
மதராச பட்டினம் படத்தில் மேகமே, 96 படத்தில் அந்தாதி ஆகிய பாடல்களை பாடியவர் நாசர் தான். விக்ரம் வேதா, தீரன் அதிகாரம் ஒன்று, ஆளவந்தான், குரு என பல படங்களில் இவரின் கணீர் குரல் மட்டும் ஒலித்துள்ளது. ஆங்கில படங்கள் பலவற்றிலும் நாசர் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான நாசர், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்து அவரும் அவரது மனைவியும் முக்கிய பொறுப்புக்களில் இருந்து வருகின்றனர்.

நாசரை மாற்றிய நாயகன்
கமலின் நெருங்கிய நண்பர்களில் நாசரும் ஒருவர். நாயகன் படத்தில் நடித்தது முதல் இவர்களின் நட்பு தொடர்கிறது. நாயகன் படத்தில் வெறும் 7 நாட்கள் மட்டுமே நாசர் நடித்தார். போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த ரோல் நாசரின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்ததாம். நாயகன் படத்தை பார்த்த பிறகு தனது கொள்ளைகளையே மாற்றிக் கொண்டாராம் நாசர். அந்த படத்தில் அவர் நடித்த 7 நாட்கள் காட்சிகளுக்கு படத்தில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளதை முழு படத்தை பார்த்த பிறகு தான் அவருக்கே தெரிந்ததாம்.

நாசர்–கமல் நட்பு
பாலச்சந்தர், நாசரை சினிமாவில் அறிமுகம் செய்வதற்கு முன் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் வெயிட்டர், செக்யூரிட்டி வேலைகள் பார்த்து வந்துள்ளார். தனது தந்தையின் விருப்பத்திற்காக தான் அவர் நடிகராக ஆசைப்பட்டாராம். நாசரின் வாழ்க்கையில் கமலின் பங்கு பெரிது என அவரே பலமுறை கூறி உள்ளார். குருதிப்புனல் படத்தில் தன்னை விட அழுத்தமான ரோலை நாசருக்கு வழங்கி இருந்தார் கமல். நாசரின் மகன் விபத்தில் காயமடைந்த சமயத்தில், அவருக்காக உத்தம வில்லன் ஷுட்டிங்கையே நிறுத்தி விட்டாராம் கமல்.
Recommended Video

கேலிகளை ஏணிகளாக மாற்றிய நாசர்
நாசர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இவரது மூக்கு, பெரிய அகன்ற நெற்றி ஆகியவற்றை வைத்து பலரும் இவரை கேலி செய்தார்களாம். ஆனால் பிறகு அதுவே அவரின் தனி அடையாளமாக மாறி, அவரை படிப்படியாக உயர்த்தி உள்ளது. தன்னால் எந்த ரோலையும் ஏற்று நடிக்க முடியும் என பல படங்களில் நிரூபித்துள்ளார் நாசர். வித்தியாசமான கெட்அப்பில் பாகுபலி படத்தில் இவர் நடித்த ரோல் அனைவரையும் மிரள வைத்து விட்டது. இதுவரை 200 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள நாசர், சிறந்த வில்லனுக்காக ஐந்து முறை தமிழக அரசின் விருதினை பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











