ஏப். 10ல் தசாவதாரம்!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரிண்டுகள் இப்படத்திற்காகப் போடப்படவுள்ளதாம்.
கமல்ஹாசன் முதல் முறையாக 10 வேடங்களில் மிரட்டியுள்ள தசாவதாரத்தின் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் படு வேகமாக நடந்து வருகின்றன. படத்தில் கிராபிக்ஸ் வேலைகளுக்குத்தான் அதிக வேலை இருக்கிறது என்பதால் அந்தப் பணிகளை பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களிடம் பிரித்துக் கொடுத்து அவற்றை முடுக்கி விட்டுள்ளனர்.
படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள நிலையில் ஏப்ரல் 10ம் தேதி படம் திரைக்கு வருவதாக ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில், தமிழ்ப் புத்தாண்டுக்கு நான்கு நாட்கள் முன்னதாக ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் தசாவதாரம் திரையிடப்படவுள்ளது.
சில புதிய ஏரியாக்களில் நானே சொந்தமாக திரையிடவுள்ளேன்.
படம் திரைக்கு வரும்போது இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் விடுமுறைக் காலமாகும். எனவே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கமல்ஹாசனின் சிறப்பான நடிப்பு படத்தை பெரிய அளவுக்கு கொண்டு செல்லும். தமிழ்த் திரையுலக வரலாற்றில் பெரும் சாதனை படைக்கும் என்று திடமாக நம்புகிறேன் என்றார் அவர்.
கிராபிக்ஸ் வேலைகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கியுள்ளதாம். படத்தின் ஆடியோவை முற்றிலும் வித்தியாசமான முறையில் பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தவும் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











