வெள்ள பாதிப்பிற்கு அரசு காரணமல்ல, மக்கள் தான் காரணம் - விவேக்
சென்னை: சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பிற்கு அரசு காரணமல்ல, மக்கள் தவறு செய்ததால் தான் இந்தளவு பாதிப்பு ஏற்பட்டது என்று நடிகர் விவேக் கூறியிருக்கிறார்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெய்த மழை சென்னையை மிகவும் சோதித்து விட்டது. மழை முடிந்தும் இன்னும் அந்தப் பாதிப்புகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் "மழை வெள்ளத்தால் சென்னையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இந்த பாதிப்புக்கு அரசு எதுவும் தவறு செய்யவில்லை. மழை நீர் செல்லும் பகுதிகளில் வீடுகளை கட்டியும் நீர் நிலைகள், ஏரிகள் உள்ள பகுதிகளில் வீடு கட்டி மழை நீர் வெளியேற முடியாமல் செய்து விட்டது மனிதர்கள் தான்.
சென்னையில் எனது திரையுலக நண்பர்களுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளை செய்ய உள்ளேன். அங்கு மக்கள் அனைவரும் மீண்டும் இயல்பான நிலைக்கு முழுமையாக திரும்ப வேண்டும்.
நான் டெல்லியில் கலாமை சந்தித்தபோது தற்போது உள்ளதை விட புவி வெப்ப மயமாதலால் இன்னும் 5 ஆண்டுகளில் 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இதனால் அதிக பாதிப்பு இருக்கும் என்று கூறினார்.
அவரது கூற்று தற்போது முழுவதும் உண்மையாகி விட்டது.கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக காரணம் என்ன என்பது குறித்து பாரீசில் நடந்த உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் கூட புவி வெப்ப மயமாதலால் தான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
என்னை 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார். அதை ஏற்று இதுவரை 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளேன்.
வெயில் தொடங்கியதும் மீண்டும் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்க உள்ளேன். 1 கோடி மரக்கன்றுகளை நட்டு முடிப்பது தான் அப்துல்கலாமிற்கு நான் செய்யும் உண்மையான மரியாதை".
என்று நடிகர் விவேக் தெரிவித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











