முதன்முறையாக விஜய்யுடன் இணையும் ஜெயம் ரவி
சென்னை: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த ஆண்டில் ஹாட்ரிக் ஹிட்டடித்த ஜெயம் ரவி தற்போது, 'போகன்' படத்தில் அரவிந்த் சாமி-ஹன்சிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
மேலும் சக்தி சவுந்தர் ராஜன், மோகன் ராஜா இயக்கத்திலும் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார்.

ஏ.எல்.விஜய்
அஜீத்-திரிஷா நடித்த கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். கிரீடத்தில் விஜய் முத்திரை பதிக்கவில்லை எனினும் 'மதரசாப்பட்டினம்', 'தெய்வத் திருமகள்' ஆகியவை இவருக்கு சொல்லிக் கொள்ளும் படங்களாக அமைந்தன. வெற்றி, தோல்வி என மாறிமாறி பயணிக்கும் விஜய் தற்போது பிரபுதேவா-தமன்னா நடிக்கும் படத்தை 3 மொழிகளில் இயக்கி வருகிறார்.

ஜெயம் ரவி
தொடர் வெற்றிகளால் கவுதம் மேனன், லட்சுமணன், சக்தி சவுந்தர் ராஜன், மோகன் ராஜா, சுசீந்திரன் என அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் படத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பது உறுதியாகியுள்ளது.

12 ஆண்டுகளுக்கு
இதுகுறித்து விஜய் '' 12 வருடங்களுக்கு முன் எனது முதல் படத்தில் ஜெயம் ரவியை நடிக்க வைக்கத் திட்டமிட்டு அது முடியாமல் போய்விட்டது. 2 வருடங்களாக ஒரு கதை குறித்து விவாதம் செய்து தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. இது ஆக்ஷன்+ ரொமான்ஸ் கலந்த கலவையாக இருக்கும். ஆக்ஷன் காட்சிகளை அந்தமானிலும், ரொமான்ஸ் காட்சிகளை சென்னையிலும் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்'' என்று கூறியிருக்கிறார்.

தேசிய அளவில்
முதன்முறையாக விஜய்யுடன் இணைவது குறித்து ஜெயம் ரவி ''விஜய் இயக்கம் எனது நடிப்புக்கு பொருத்தமாக இருக்கும். நான் நீண்ட நாட்களாக அவருடன் பணியாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன். தற்போது என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது. இப்படம் எங்கள் இருவரையும் தேசிய அளவில் பிரபலப்படுத்தும்'' என்றார்.

லெமூரியா
மற்றொருபுறம் இப்படம் லெமூரியா கண்டத்தின் வரலாற்றை எடுத்துக் கூறும் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











