ஆண் சிங்கம் வேட்டைக்கு போகாது.. அண்ணாத்த தூங்குவாரு.. குட்டி போட உதவி செய்வாரு.. விஜய்யை கலாய்த்த கமல்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடந்தது. லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் இதில் உற்சாகத்துடன் கலந்துகொண்டார்கள். அவர்கள் மத்தியில் பேசிய விஜய், 'ஆண் சிங்கம் வேட்டையாட மட்டும்தான் வெளியே வரும்' என தன்னை சிங்கத்தோடு ஒப்பிட்டு பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு ட்ரோல்களை சந்திக்க ஆரம்பித்திருக்கிறது.
அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டினை மதுரையில் நேற்று நடத்தினார். மாநாடு ஏற்பாடுகள் எல்லாம் மும்முரமாக நடந்தாலும்; நூறு ஆடி கொடி கம்பம் சரிந்து விழுந்து கார் சேதமடைந்ததிலிருந்து இந்த தவெக மாநாடு ஊடக வெளிச்சத்தை மேற்கொண்டு பெற்றது. நல்வாய்ப்பாக கார் மட்டுமே டேமேஜ் ஆனது; எந்த உயிர் பலியும் நடக்கவில்லை.
உயிரிழப்பும் நடந்தது: லட்சக்கணக்கான தொண்டர்கள் இதில் கலந்துகொண்டார்கள். உணவு, கூழ் உள்ளிட்டவைகளின் விலைகள் எல்லாம் அதிக அளவில் இருந்ததாக மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள். இது ஒருபக்கம் இருக்க நீலகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் ஏற்பட்டது. மாநாட்டு திடலில் வைத்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும்; பேருந்தில் செல்லும்போது மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாலும் அவர் உயிரிழந்தார். அதேபோல் ஏகப்பட்ட சேர்களையும் தொண்டர்கள் சேதமாக்கினார்கள்.

விஜய்யின் பேச்சு: இதெல்லாம் நடந்திருக்கும் நிலையில் மாநாட்டில் விஜய்யின் பேச்சும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தங்களது எதிரி பாஜகவும், திமுகவும்தான் என்பதை இதிலும் உறுதிப்படுத்தியிருந்தார். அதேபோல் 234 தொகுதிகளுக்கும் நானே வேட்பாளர் எனவும் அறிவித்திருக்கிறார். இவை தவிர்த்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள் என பேசியது திமுகவினரிடமும், சில பத்திரிகையாளர்களிடமும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பேச்சுக்கு கண்டனங்களும் எழ தொடங்கியிருக்கின்றன.
கமல் மீது தாக்குதல்: அவர் பேசுகையில், "நான் சினிமாவில் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வரவில்லை. உச்சத்தில் இருக்கும்போதே வந்திருக்கிறேன்" என தெரிவித்தார். இதனை கவனித்த ரசிகர்களோ, கமலைத்தான் மறைமுகமாக விஜய் விமர்சித்திருக்கிறார் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் சென்னை விமான நிலையத்தில் வைத்து கமலிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் எப்படி பதில் எழுத முடியும் என்று கூறி சென்றார்.
விஜய் சிங்கம்: விஜய்யின் பேச்சில் ஹைலைட்டாகும் விஷயங்களில் ஒன்று அவர் தன்னை சிங்கத்தோடு ஒப்பிட்டு பேசியதுதான். அவர் மக்களை சந்திப்பதே இல்லை. ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்று கிண்டல்கள் எழுந்திருக்கும் நிலையில், நேற்றைய மாநாட்டில், 'சிங்கம் வேட்டையாட மட்டும்தான் வெளியே வரும். தன்னைவிட பெரிய சைஸில் இருக்கும் விலங்குகளைத்தான் சாப்பிடும்' என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு ட்ரோலை சந்திக்க ஆரம்பித்திருக்கிறது.
அன்றே சொன்ன கமல்: இந்நிலையில் பம்மல் கே சம்பந்தம் படத்தில் ஆண் சிங்கம் பற்றி கமல் பேசும் க்ளிப்பிங் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. அதாவது அவர், "காட்டில் ஆண் சிங்கம் எப்போதும் வேட்டைக்கு போகாது. பெண் சிங்கம்தான் வேட்டைக்கு போகும். ஆண் சிங்கமோ குட்டி போட ஹெல்ப் செய்யும். பெண் சிங்கம் கொண்டு வரும் கறியை தின்னுட்டு அண்ணாத்த தூங்கிடுவாரு" என குறிப்பிடுவார். அந்த க்ளிப்பிங்கை இப்போது சுத்தலில் விட்டிருக்கும் ரசிகர்கள், விஜய்யை பற்றி அன்றே கமல் சொல்லிவிட்டாரே என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











