அன்பை வலியுறுத்தும் தலைவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது!- கமல் ஹாஸன்
சென்னை: இன்று அன்பை வலியுறுத்தும் தலைவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லுாரியும், இந்தோ - அமெரிக்கன் அசோசியேஷனும் இணைந்து, மார்டின் லுாதர் கிங் நினைவு சொற்பொழிவு நிகழ்வை நடத்தின.
இதில் பங்கேற்ற கமல் ஹாஸன் பேசுகையில், "வேட்டை சமூக மரபிலிருந்து விலகி, நாகரிகம் வளர்ந்து, மனிதர்கள் நிலைத்து வாழத் துவங்கினர்.

அதன் பின்பும், மனிதர்களை வேட்டையாடுவதை, போர் விளையாட்டாக பல நாடுகள் செய்தன. போர் வெறி மிகுந்து, உலகை வெல்லும் வழியாக, ஆயுதமாக மாறியது போர்.
போர்க்குற்றங்களை பல நாடுகள், குற்றங்களாகவே பார்ப்பதில்லை. உண்மையில், உலகை, போரால் வெல்ல முடியாது; அன்பால்தான் வெல்ல முடியும். அதற்கு, உலக மக்கள் யாவரும் ஒரே குடும்பம் என்பதை உணர வேண்டும். அதைத்தான், காந்தி, மார்டின் லுாதர் கிங், நெல்சன் மண்டேலா உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
அப்படிப்பட்ட தலைவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நம் குழந்தைகளிடம், போரில்லாத உலகம் பற்றிய கனவை வளர்க்க வேண்டும். அதற்கு, அந்தத் தலைவர்களின், அறவழியை போதிக்க வேண்டும். அப்போது தான், பல தலைவர்கள் உருவாவர். உலகில் அமைதி ஏற்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications











