நரேன்-மஞ்சு பிரஸ்மீட்!
புது மணத் தம்பதிகளான சூட்டோடு நரேனும், அவரது மனைவி மஞ்சுவும் சென்னைக்கு வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
சித்திரம் பேசுதடி, பள்ளிக்கூடம் படத்தின் நாயகன் நரேனுக்கும், அவரது நீண்ட நாள் காதலி மஞ்சுவுக்கும் கடந்த 26ம் தேதி கோழிக்கோட்டில் கல்யாணம் நடந்தது. செப்டம்பர் 1ம் தேதி திருமண வரவேற்பை சென்னையில் வைத்துள்ளனர்.இந்த நிலையில் வியாழக்கிழமை சென்னை வந்த புதுமணத் தம்பதியினர் மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
புதுக் கல்யாண கருக்கு இன்னும் இருவரின் முகத்திலும் போகவில்லை. குறிப்பாக மஞ்சுவின் முகத்தில் வெட்கத்தின் வெளிச்சம் படு ஜோராக பிரகாசித்துக் கொண்டிருந்தது.
நரேன் கூறுகையில், இது சுத்தமான காதல் கல்யாணம். ஆனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்த கல்யாணம் என்றார்.
மஞ்சு நரேன் கூறுகையில், எனது கணவர் நடிகராக இருப்பது பெருமையாக உள்ளது. அவரது தொழில் முன்னேற்றத்திற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்றார்.
கேமராமேன், இயக்குநர் ராஜீவ் மேனன் மூலமாக திரையுலகுக்கு வந்தவர் நரேன். ராஜீவிடம் உதவியாளராக இருந்தவர் நரேன். பின்னர் அடூர் கோபாலகிருஷ்ணனின் நிழல்கூத்து படத்தில் நடிகராக மாறினார். 4தி பீப்பிள் படம் மூலம் பிரபலமானார்.
பிறகு வந்த கிளாஸ்மேட்ஸ் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழுக்கும் வந்தார். நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம் என இதுவரை 3 படங்களில் தமிழில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் மம்முட்டி, மீரா ஜாஸ்மினுடன் இணைந்து நடித்த ஒரே கடல் ஓணத்திற்கு வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. இப்படம் நரேனின் கல்யாண நாளன்று ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











