சரத், ராதாரவி, சந்திரசேகர்... இப்போதைக்கு விளக்க நோட்டீஸ்.. அடுத்து நீக்கம்! - விஷால்
சென்னை: நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோருக்கு இப்போது விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அனைவரையும் கலந்து ஆலோசித்து நீக்கம் குறித்து முடிவெடுப்போம் என்று நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் நடிகர் சங்கத்துக்குத் தேர்வான புதிய நிர்வாகிகள், பழைய நிர்வாகிகளிடம் முறையான கணக்கு வழக்குகளைக் கேட்டு வருகின்றனர்.

இதில், நடிகர் சங்க அறக்கட்டளை கணக்குகள் சரியாக ஒப்படைக்கப்படாததால் சரத்குமார் தலைமையிலான நிர்வாகத்தினர் மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவர் நாசர், செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் நடிகர் சங்கத்திலிருந்து தாற்காலிகமாக நீக்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் தீர்மானமாகவும் இது நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.
பின்னர், இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், சரத்குமார் உள்ளிட்ட மூவரின் நீக்கம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார்.
இந்த விவகாரம் குறித்து விஷால் இன்று அளித்த விளக்கம்:
சங்க செயற்குழுவில் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் நீக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது அவர்கள் மீதான புகாருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப முடிவெடுத்துள்ளோம். சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும் கலந்து ஆலோசித்த பிறகே நீக்குவது குறித்து முடிவெடுப்போம்," என்றார்.


Click it and Unblock the Notifications











