செல்வா இயக்கத்தில் பார்த்திபன்
இயக்குநர் செல்வராகவனின் டைரக்சனில் எடுத்துக் கொண்டிருக்கும் 'ஆயிரத்தில் நான் ஒருவன்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் கம் டைரக்டரான பார்த்திபன் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படமான 'அம்முவாகிய நான்' படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பார்த்திபன் தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டி நீ.....ண்ட நாட்களுக்கு பிறகு கோலிவுட்டில் மீண்டும் வலம் வரவுள்ளார்.
'அம்முவாகிய நான்' படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன், உடனே பார்த்திபனுக்கு போன் செய்து புகழ்ந்து தள்ளிவிட்டாராம். அது மட்டுமில்லாமல் தான் டைரக்ட் செய்து கொண்டிருக்கும் ஆயிரத்தில் நான் ஒருவன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் அழைத்துள்ளாராம்.
இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த பார்த்திபன், செல்வராகவன் கேட்டவுடன் சரியென்று சொல்லிவிட்டாராம். ஆயிரத்தில் நான் ஒருவன் படத்தில் பருத்திவீரன் பட கதாநாயகன் கார்த்தி, ரீமாசென் ஜோடியாக நடிக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த படப்பிடிப்பில், கார்த்தி-ரீமாசென் தொடர்பான இரண்டு பாடல்கள் எடுத்து விட்டார்களாம்.
இந்தப்படத்தில் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான மறைந்த எம்ஜிஆர் நடித்த 'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்' என்ற பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார்களாம்.
இதே பாடலை நடிகர் அர்ஜூனின் மதராஸி படத்திலும் ரீமிக்ஸ் செய்துள்ளனர்.
அர்ஜூன் நடிக்கும் படத்தில் எல்லாம் வழக்கமாக பக்தி பாடல்களை தான் ரீமிக்ஸ் செய்வார். ஆனால் இப்போது எம்ஜிஆர் பாடலை ரீமிக்ஸ் செய்கிறார்.. ஏனாம்?
எதிர்ப்பு வந்துட்டா ஆபத்தில்லையா...அதான்.


Click it and Unblock the Notifications











