முதல் நாளே 100 கோடி ஓபனிங்.. இந்திய சினிமாவில் மாஸ் காட்டும் டாப் 5 நடிகர்கள்.. ரஜினி, விஜய் செம!
சென்னை: கூலி திரைப்படம் முதல் நாளே 151 கோடி ரூபாய் என்கிற விஸ்வரூப ஓபனிங்கை கொடுத்து இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன், அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களின் லைஃப் டைம் வசூலையே பந்தாடி விட்டது. இந்நிலையில், இந்திய சினிமாவில் முதல் நாளே 100 கோடி ஓபனிங் கிங் யாரு என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
பான் இந்தியா வெற்றியை பல ஹீரோக்கள் பாலிவுட்டில் இருந்து மட்டுமின்றி கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட்டில் இருந்தும் கொடுத்து தூள் கிளப்பி வருகின்றனர். இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் எம்புரான், ராஷ்மிகா மந்தனா, விக்கி கவுஷல் நடித்த சாவா, அஜித் குமாரின் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்கள் பெரிய வசூலை ஈட்டிய நிலையில், அதை எல்லாம் வீழ்த்தும் விதமாக தமிழில் வெளியாகி உள்ள கூலி கொல மாஸ் காட்டி வருகிறது.

இந்திய சினிமாவில் பாலிவுட், கோலிவுட்டை தாண்டி டோலிவுட்டில் தான் நடிகர்கள் அதிக 100 கோடி ஓபனிங்கை வைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் அந்த இடத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் உள்ளிட்ட 2 பேர் மட்டுமே உள்ளனர்.
முதலிடத்தில் பிரபாஸ்: ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து டோலிவுட்டை பார்த்து பாலிவுட்டே பயப்படும் அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் அதிரடி சாதனை காட்டியவர் நம்ம பிரபாஸ் தான். பாகுபலி 2 திரைப்படம் 1800 கோடி வரை வசூல் ஈட்டிய நிலையில், அந்த படத்தின் முதல் நாள் வசூலே 217 கோடிக்கும் அதிகமாக இருந்தது. சாஹோ திரைப்படம் முதல் நாளில் 150 கோடி வசூலை ஈட்டியது. ஆதிபுருஷ், சலார் மற்றும் கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்களும் 100 கோடி ஓபனிங் சாதனையை படைத்தன. ஒட்டுமொத்தமாக 5 படங்கள் பிரபாஸ் கைவசம் உள்ளன. அடுத்து ராஜாசாப், ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2 உள்ளிட்ட படங்களும் கண்டிப்பாக 100 கோடி ஓபனிங்கை அள்ளும் என்கின்றனர்.

2வது இடத்தில் விஜய், ஷாருக்கான்: தளபதி விஜய் லியோ மற்றும் கோட் படங்களின் மூலம் 2 முறை 100 கோடி ஓபனிங் படங்களை கொடுத்து கேரியரின் உச்சத்துக்கு சென்றுவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் 148 கோடி ரூபாயை முதல் நாளில் உலகளவில் வசூல் செய்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கோட் திரைப்படம் 126 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் அள்ளியது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் பதான், ஜவான் என அடுத்தடுத்து ஒரே ஆண்டில் 2 ஆயிரம் கோடி படங்களை கொடுத்தார். இரண்டு படங்களின் ஓபனிங் வசூலும் 100 கோடிக்கு மேல்.
3வது இடத்தில் ஜூனியர் என்டிஆர்: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மற்றும் ஜூனியர் என்டிஆர் சோலோவாக நடித்த தேவரா உள்ளிட்ட படங்கள் முதல் நாளிலேயே 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி அபார சாதனையை படைத்தன. ஆர்ஆர்ஆர் படம் ராம் சரணுக்கும் முதல் 100 கோடி ஓபனிங் என்று தான் சொல்ல வேண்டும்.

4வது இடத்தில் அல்லு அர்ஜுன்: புஷ்பா 2 படத்தின் மூலம் 1800 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை அள்ளி ராஜமெளலி இல்லாமலே தன்னால் சாதிக்க முடியும் என நிரூபித்த அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் மூலம் முதல் நாளே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங் நாயகனாக மாறிவிட்டார். அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் எல்லாம் 2000 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5வது இடத்தில் 4 பேர்: கூலி படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் 100 கோடி ஓபனிங்கை கொடுத்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் 100 கோடி ஓபனிங் செய்ய ஜஸ்ட் மிஸ் ஆனது. ஜெயிலர் 2 திரைப்படம் கண்டிப்பாக 100 கோடிக்கும் அதிகமான ஓபனிங்கை கொடுக்கும். கேஜிஎஃப் படத்தின் மூலம் கன்னட நடிகர் யஷ், அனிமல் படத்தின் மூலம் ரன்பீர் கபூர் மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ராம்சரண் உள்ளிட்டோரும் முதல் நாளே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











