ராஜாகண்ணு குடும்பத்துக்கு வீடு...உருக்கமாக அறிவித்த லாரன்ஸ்
சென்னை : சூர்யா நடித்த ஜெய்பீம் படம் சமீபத்தில் ஓடிடி.,யில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை ஞானவேல் இயக்கி இருந்தார். இந்த படத்தில் முதல் முறையாக வழக்கறிஞர் ரோலில் சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரித்திருந்தது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நியாயம் கேட்கும் வழக்கறிஞர் ரோலில் சூர்யா நடித்திருந்தார். நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஜெய்பீம் படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

குவியும் பாராட்டுக்கள்
தமிழக முதல்வர் ஸ்டாலின், கமல், எஸ்.ஜே.சூர்யா, மாதவன் உள்ளிட்ட பலரும் ஜெய்பீம் படத்தை பாராட்டி உள்ளனர். சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யாவின் ஜெய்பீம் படமும் பெரிய அளவில் பாராட்டை அள்ளி குவித்து வருகிறது. இந்த படத்தில் நடித்ததுடன் பாதிக்கப்பட்ட சமூக மக்களின் நலத்திட்ட பணிகளுக்காக சூர்யா மற்றும் ஜோதிகா சார்பில் முதல்வரிடம் ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டது.

லாரன்ஸ் உதவி
இந்நிலையில் இந்த கதையில் குறிப்பிடப்பட்டுள்ள ராஜாக்கண்ணுவின் குடும்பத்திற்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இந்த தகவலை அறிக்கையாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

ராஜாகண்ணு அனுபவித்த துயரம்
லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை வலைப்பேச்சில் பார்த்த போது என்னை பெரிதும் பாதித்தது. வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன்.

வலைப்பேச்சுக்கு நன்றி
பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்குக் கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள்.
Recommended Video

பேசு பொருளாக்கிய ஜெய்பீம்
28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயரநிகழ்வை, இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய திரு.சூர்யா அவர்களுக்கும், திருமதி.ஜோதிகா அவர்களுக்கும், இயக்குநர் திரு.த.செ.ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் என லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

குவியும் உதவிகள்
லாரன்சின் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று, பாராட்டு தெரிவித்துள்ளனர். ராஜாக்கண்ணு குடும்பத்தினரின் பேட்டிகள் வெளியாகி, பல உண்மை சம்பவங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து ராஜாக்கண்ணு குடும்பத்திற்கு உதவிகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











