தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரிலேயே படம் வெளியாக வேண்டும்! - ரஜினி கண்டிப்பு
லிங்கா படத்தில் தனக்கு நேர்ந்த நெருக்கடிகள், நடந்தேறிய சூழ்ச்சிகள் அனைத்தையும் பார்த்த ரஜினி, தனது அடுத்த புதுப்படத்தில் இப்படி எந்த விஷயமும் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
ரஞ்சித் இயக்கும் இப்படத்துக்குத் தாணுதான் தயாரிப்பாளர் என்பதை முதலிலேயே உறுதியாகக் கூறிவிட்டாராம் ரஜினி.

ஆனால் 'லிங்கா' படத்தைப் போலப் பல தயாரிப்பாளர்கள் மாறக் கூடாது என்று முடிவு செய்து, "எந்த ஒரு நிறுவனத்துடனும் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யாதீர்கள். உங்கள் பட நிறுவனத்தின் பெயரில்தான் முழுப் படமும் இருக்க வேண்டும், வெளியாகவும் வேண்டும்" என்று ரஜினி கூறினாராம். இதைப் பட ஒப்பந்தத்திலும் சேர்க்க வேண்டும் என்றாராம் ரஜினி. எந்திரன் படத்தில் இப்படித்தான் செய்தார். அதை தாணு படத்திலும் தொடரவிருக்கிறார்.
அதேபோல, ரஜினி படம் என்றாலே அவருக்கு சில ஏரியாக்கள் விநியோக உரிமை கொடுப்பார்கள். இப்படத்தில் அது போல எதுவுமே வேண்டாம் என்று கூறிவிட்ட அவர், சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுப்பதோடு சரி.
வெளியீட்டுச் சமயத்தில் எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் தாணு மட்டுமே பொறுப்பு என்பதை படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்போதே அறிவிக்கவும் படக் குழு திட்டமிட்டிருக்கிறது.
ரஜினி படம் என்பதால் எந்த வடிவிலாவது தொல்லை கொடுக்க நினைப்போருக்கு எச்சரிக்கை அளிக்கவே இத்தனை முன் ஜாக்கிரதை!


Click it and Unblock the Notifications











