கமலுடன் இணையும் படம்.. இயக்குநர் யார்?.. சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த சூப்பர் அப்டேட்
சென்னை: ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருப்பவர்கள். அவர்கள் இரண்டு பேருக்குமே செலிபிரிட்டிகள் முதல் சாமானியர்கள்வரை ரசிகர்களாக இருக்கிறார்கள். கடைசியாக ரஜினி நடித்த கூலி, கமல் நடித்த தக் லைஃப் ஆகிய படங்கள் தோல்வியைத்தான் சந்தித்தன. இந்நிலையில் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிப்பதாக கூறப்படும் படம் குறித்து ரஜினி பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் 10 படங்களில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்தில் ரஜினியை அழைத்த கமல் ஹாசன் நாம் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால் இருவரது கரியரும் முன்னேறாது என்று கூறி தனியாக நடிக்குமாறு அறிவுறுத்தினார். அதனை கேட்டு ரஜினியும் தனியாக நடிக்க ஆரம்பித்தார். இரண்டு பேரும் சேர்ந்து கடைசியாக அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நடித்தார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: தனியாக நடிக்க ஆரம்பித்து தனக்கென பிரத்யேக உடல்மொழியையும், ஸ்டைலையும் உருவாக்கிக்கொண்ட ரஜினிகாந்த் உச்சத்திற்கு சென்றார். அவரது நடை, உடை, பாவனையை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்தனர். இன்றுவரை ரஜினிகாந்த் அதே பட்டத்துடன் வலம் வருகிறார். இப்போது கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார்.

உலக நாயகன் கமல் ஹாசன்: ரஜினிகாந்த் ஒருபக்கம் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடிக்க, கமல் ஹாசன் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து பல புதுமைகளை புகுத்தினார். இதன் காரணமாக கமல் ஹாசன் உலக நாயகன் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசம் நிச்சயம் இருந்துவிடும் என்ற விதியும் இன்று அகலாமல் இருக்கிறது. ரஜினியேகூட கமல் ஹாசனை கலையுலக அண்ணா என அழைத்த சம்பவம் அரங்கேறியிருப்பது அனைவரும் அறிந்தது.
எப்போது சேர்வார்கள்: ரஜினியும் கமலும் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் எப்படியாவது மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையில் இருப்பவர்களிடமே இருக்கிறது. அவர்களும் தாங்கள் சேர்ந்து நடிப்பதற்கு தயார்தான் என்று ஓபனாகவே பொன்னியின் செல்வன் பட மேடையில் அறிவித்தார்கள். கடைசியாக ரஜினி நடித்த கூலியும், கமல் நடித்த தக் லைஃப் படமும் படுதோல்வியை சந்தித்தன.
இணையும் சிகரங்கள்: நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் பேசிய கமல், தானும் ரஜினியும் சேர்ந்து நடிக்கவிருப்பதாக கூறினார். இதனால் இரண்டு பேரின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதேசமயம் அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் மட்டும் இயக்கிவிடக்கூடாது என்றும் பலர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏனெனில் கூலி கொடுத்த ரிசல்ட் அப்படி.
ரஜினி சொன்னது: இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள கோவை சென்றார் ரஜினி. அப்போது சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், 'நானும், கமலும் இணைந்து நடிக்கும் ஆசை இருக்கிறது. அவருடன் சேர்ந்து படம் செய்யும் பிளானும் உள்ளது. அடுத்ததாக ராஜ்கமல் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். அந்தப் படத்தின் கதை, இயக்குநர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என்றார்.


Click it and Unblock the Notifications











